108ல் கூடுதலாக சேர்க்கப்படும் 128!
நெல்லை: தமிழகத்தில் சிறப்பாக இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிதாக 128 வாகனங்கள் சேர்க்க ஏற்பாடு நடந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஜிவிகே-இம்ஆர்ஐ என்ற அமைப்புடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவை நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 629 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் சேவை செய்து வருகிறது.
அவசர சிகிச்சை
அவசர சிகிச்சைக்கான நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தும், ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கும் அழைத்து வரும் பணி இதன் முக்கிய நோக்கமாகும்.
21 லட்சம் பேருக்குப் பயன்
கடந்த 5 ஆண்டுகளில் இச்சேவை மூலம் தமிழகத்தில் 21 லட்சம் பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட 92,000 உயிர்கள்
மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த 92 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸிலேயே குழந்தைப் பேறும்
கர்ப்பிணிகள் அழைத்து செல்லும்போது 108 ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்றவர்கள் ஏராளம். குழந்தைகளை காக்கும் நியோ நோட்டல் சிறப்பு வசதி செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1500க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மேலும் 128 ஆம்புலன்ஸ்கள்
இந்நிலையில் இந்த சேவையில் மேலும் 128 ஆம்புலன்ஸ்சுகளை சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது வருகிற ஏப்ரல் மாதம் முதல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனாளிகள் அதிகரிப்பார்கள்
இதில் பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை மூலம் மேலும் பயன்பெறும் நோயாளிகள் எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 758 ஆம்புலன்ஸ்கள்
இந்த 128 ஆம்புலன்ஸையும் சேர்த்து மொத்தம் ஆம்புன்ஸ்சுகளின் எண்ணிக்கை 758 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.