இலவசப் பொருட்கள் லஞ்சம் இல்லை.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து
தமிழக அரசு இலவசப் பொருட்களை வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மக்களின் மனநிலை மாறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இலவசப் பொருட்கள் குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்பே தடுக்க முறையான சட்டம் அவசியம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இலவசப் பொருட்கள் தருவதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிப்பதை தடுப்பது தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான், பாஜகவின் ரவிசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலவசப் பொருட்களைக் கொடுப்பதை லஞ்சமாக கருதக் கூடாது என்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.