கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... வதந்தி என தகவல்
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து காவல்துறையினருடன் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினர். கடைசியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவரவே அனைவரும் நிம்மதியடைந்தனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்த மர்ம டெலிபோன் அழைப்பில் பேசியவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடி குண்டு வைத்து இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடித்து சிதரும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு உடனடியாக தவகல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய்கள், மற்றும் வெடி குண்டு கண்டு பிடிக்கும் கருவிகளுடன் பேருந்து நிலையத்தின் உள்ளே, அங்குள்ள கடைகள், பிளாட்பாரங்கள், மற்றும் சுற்று புற பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதிகாலை 5 வரை நீடித்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, மர்ம நபர் பேசிய போன் நம்பரை வைத்து விசாரித்தபோது, வட பழனியில் உள்ள குலசேகர பெருமாள் கோவில் அர்ச்சகர் முருகானந்தத்துக்கு சொந்தமானது செல்போன் நம்பர் என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, முருகானந்தத்தை பிடித்து விசாரித்த போது, 15 நாள் முன்பு தனது செல்போன் தொலைந்து விட்டதாக கூறியுள்ளார். இருந்தாலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.