ராணுவ வீரர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: 2 பீகார் அமைச்சர்கள் மீது தேச துரோக வழக்கு!
பாட்னா: இறப்பதற்காகவே ராணுவத்திலும் போலீசிலும் சேருகின்றனர் என இந்திய ராணுவ வீரர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பீகார் அமைச்சர்கள் 2 பேர் மீது நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் ஐவர் அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த பீகார் மாநில ஊரக வேலைத் துறை அமைச்சர் பீம்சிங், "யாராவது போலீஸ் அல்லது ராணுவத்தில் சேருகிறார்கள் என்றால் அவர்கள் உயிர்தியாகம் செய்வதற்காகத்தான்" என்றார்.
மேலும், வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திரசிங் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இல்லை, எல்லையில் உள்ள தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தான் இது" என்று கூறினார்.
நிதிஷ்குமார் வருத்தம்
இதனிடையே, அமைச்சர்களின் கருத்து பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், "இது வருந்தத்தக்கது. நான் தனிப்பட்ட முறையில் இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபற்றி நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இதனை மீண்டும் கூறவிரும்பவில்லை. உண்மையிலேயே நான் வருத்தத்தில் இருக்கிறேன்'' என்றார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்டதற்கு, "ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கட்சித் தலைவர் இந்த பிரச்னையை கையில் எடுத்தபின் நான் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை" என்றார் நிதிஷ்குமார்.
தேசதுரோக வழக்கு
இந்த அமைச்சர்களின் கருத்து நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரு அமைச்சர்கள் மீதும் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராம்சந்தேஷ் ராய் என்பவர் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அமைச்சர்கள் பீம்சிங் மற்றும் நரேந்திரசிங் கூறியது ராணுவ வீரர்களின் உயிர்தியாகத்தை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை; இந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவர்கள் இழிவுபடுத்தி விட்டனர்" என்று கூறியுள்ளார்.
துணை எஸ்.பி மீது வழக்கு
அதேபோல உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லியில் இருந்து சொந்த கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பாட்னா விமான நிலையம் வந்தபோது, சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மணிஷ்குமார் சின்ஹா என்பவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர்கள் மீது 124ஏ, 131, 153ஏ(1), 153பி உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட், இந்த வழக்குகளை விசாரிக்கும்படி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ரவி ரஞ்ஜனுக்கு அனுப்பினார்.
இந்த வழக்கு 13ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.
மற்றொரு அமைச்சர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான கவுதம்சிங்கின் தொகுதியான மாஞ்ஜி தொகுதியை சேர்ந்த பிரேம்நாத் சிங் என்ற வீரரும் இந்த தாக்குதலில் பலியானார். அந்த வீரரின் இறுதி சடங்கில் அமைச்சர் கவுதம்சிங் கலந்து கொள்ளாமல், அந்த வீரர் தனது தொகுதியில் உள்ள சம்ஹவுதா கிராமத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் மறுநாள் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இறுதிச்சடங்கில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சரிடம் கேட்டபோது, "பிரேம்நாத்சிங் இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளாதது ஒரு பிரச்னையா? இதனால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?" என்றும் கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே பீகாரைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு அமைச்சரும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். அவர் மீது என்ன வழக்கு பாயுமோ? என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.