மணிப்பூரை பிரிக்கக் கோரி பந்த்! இயல்பு வாழ்க்கை முடக்கம்!!
இம்பால்: மணிப்பூரில் மாநிலப் பிரிவினை கோரி நாகா இன மக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருவதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி முடங்கிப் போயுள்ளது.
மணிப்பூரில் வாழும் நாகா இனத்தவர் பகுதிகளை நாகாலாந்துடன் சேர்க்க வேண்டும் என்பது ஐக்கிய நாகா கவுன்சிலின் கோரிக்கை. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனால் சேனாபதி, உக்ருல், சண்டல், டமங்லாங் மாவட்டங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன. வணிக வளாகங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதனிடையே குக்கி இன மக்கள் குக்கிலாந்து தனி மாநிலம் கோரி இன்று இரவு முதல் 48 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் முழு அடைப்புப் போராட்டங்களால் மணிப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.