பள்ளிகளில் மாணவர்கள் கடத்தப்பட்டால் நிர்வாகம்தான் பொறுப்பு… காவல்துறை அறிவிப்பு
பள்ளிகளில் மாணவர்கள் கடத்தப்படுவதற்கு பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எல்.கே.ஜி மாணவன் கடத்தல்
சென்னையில் அண்மையில் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படிக்கும் சூர்யா என்ற மாணவன் பள்ளி வளாகத்தில் இருந்து கடத்தப்பட்டான். இந்த சம்பவத்தில் 5 மணி நேரத்தில் மாணவரை போலீஸார் மீட்டனர். கடந்த சில ஆண்டுகளாக இது போன்று பள்ளி மாணவர்களை கடத்தும் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி நிர்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
சி.சி.டி.வி கேமரா
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். மாணவர்களை அழைத்து வரும் நபர்களுக்கு அடையாள அட்டை அவசியம் என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகள் பள்ளி நிர்வாகத்திற்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகம் பொறுப்பு
பள்ளி வளாகத்தில் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்தால் அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பு
பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காததே இதுபோன்ற கடத்தல் சம்பவங்களுக்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதுபோன்ற குற்றச்செயல்களை தவிர்க்க பள்ளி வளாகம் அருகே அவ்வப்போது காவல் துறையினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் கவலை
மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகிகளும், காவல்துறை தரப்பிலும் செய்யவேண்டிய நடவடிக்கைகளை பொறுப்புடன் நிறைவேற்றினால் கடத்தல் போன்ற சம்பவங்களை தடுக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.