அவதூறு வழக்கில் 3 மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்துக்கு விலக்கு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இந்த 3 நீதிமன்றங்களிலும் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் தனபாலன், சி.டி. செல்வம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த அவர்கள் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.