சுதந்திர தினம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: பார்சல் அனுப்ப 3 நாட்கள் தடை
சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் பார்சல் அனுப்ப மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகம் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் ரயில்வே போலீசார் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள்.24 மணி நேரமும் 3 ஷிப்டு முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொண்டு வரும் உடமைகளும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. ரயில் நிலையத்திற்குள் நுழைவு வாசல் வழியாக மட்டுமே பயணிகள் வரவேண்டும். மற்ற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
போலீசார் கண்காணிப்பு
வெடிகுண்டு சோதனை கருவி மூலமும், நாய் மூலமும் ரயில் நிலையத்தின் முக்கிய பகுதிகள் சோதனை செய்யப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கோபுரத்தின் மேல் பகுதியிலும், மூர் மார்க்கெட் 10 அடுக்கு மாடி கட்டிடத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மின்சார ரயில் நிலையத்திலும்
மூர் மார்க்கெட் மின்சார ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியாக யார் நின்றாலும் போலீசார் பிடித்து விசாரிக்கிறார்கள். சாதாரண உடையிலும் போலீசார் ரயில் நிலையங்களில் கண்காணிக்கிறார்கள்.
பார்சல் அனுப்ப தடை
மேலும் ரெயில்களில் பொருட்கள் அனுப்ப இன்று முதல் 3 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் போன்ற அழுகும் பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் எதுவும் பார்சலில் அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்கு பிறகே காய்கறிகள்,பழங்கள் பார்சல் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
மதுரை, கோவையில உஷார்
இந்த உச்சக்கட்ட பாதுகாப்பு 16-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதேபோல தாம்பரம், மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கூடும் இடங்களில்
இதேபோல மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்களில் பலத்த சோதனை செய்யப்படுகிறது. அனைவரின் கைப்பைகளும் பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.