தென்காசி: 500 ஆண்டுகள் பழமையான கோயில் ‘தங்ககலசங்கள்’ கொள்ளை
செங்கோட்டை: 500 ஆண்டு பழமைவாய்ந்த கோயிலில் 3 கலசங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கோட்டை தாலுகா பண்பொழியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலை முருகன் ஆலயம். 500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயம், முருகனின் ஏழு படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
நேற்று இரவு கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரிகள்,பணியாளர்கள் சென்றுவிட்ட பின்னர், இரவில் காவலர்கள் பாலு,முருகன்,இருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். தினமும் காலை பூசாரிகள்,பணியாளர்கள் ,கோவில் நடையை திறக்கும் முன் மூலவர் முருகனின் கோபுரத்தை வணங்கி விட்டுத்தான் நடை திறப்பது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் பூசாரிகள்,பணியாளர்கள் மூலவரான திருமலை முருகன்கோபுரத்தை வணங்கியுள்ளனர். அப்போது .கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் காளி அம்மன் கோவில் கலசத்தை பார்த்துள்ளனர். அங்கேயும் இரண்டு கலசங்கள் இல்லாமல் இருக்கவே உடனடியாக துணை ஆணையாளர் கார்த்திக்குக்கு தகவல் தெரிவித்து அச்சன் புதூர் போலீசிலும் புகார் செய்தனர். புகாரைத் தொடர்ந்து தென்காசி டிஎஸ்பி.கணேசன் ,மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
2003ம் ஆண்டு கும்பாபிசேகம் நடக்கும் போது 20பவுன் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட கலசங்கள்தான் திருடு போனவை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் இரவு பணியாளர்கள் பாலு,முருகன்,ஆகிய இரண்டு பேரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பழமைவாய்ந்த ஆலய கலசத்தை திருடிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.