எல்லையில் கட்டுப்பாட்டுடன் நடந்தால்தான் பாக். உடன் பேச்சு: பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டம்!!
டெல்லி: நாட்டின் எல்லையில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று 67வது சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய சுதந்திர தின உரை:
இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
இந்தியாவை வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி வருகிறது. உத்தர்காண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது. உத்தர்காண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும்.
உத்தர்காண்டில் ராணுவ வீரர்கள் சிறப்பான மீட்புப் பணியை மேற்கொண்டனர். மும்பையில் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 18 வீரர்கள் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும். இந்த மசோதா நிறைவேறினால் 81 கோடி பேர் பயனடைவர். மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊறுதி திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
பீகார் மதிய உணவு துயரம் மீண்டும் நிகழக்கூடாது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை நீண்ட காலம் நீடிக்காது. எல்லையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் நடந்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும். எல்லை பகுதியில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் நாடு தடுக்க வேண்டும்.
மாவோயிஸ்டுகளின் போராட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டியது இப்போது அவசியம் என்றார்.