சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக நாளைமுதல் வீரணம் ஏரி தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய "புதிய வீராணம் திட்டம்" எனது தலைமையிலான அரசால் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 2.8.2013 முதல் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டிருந்தேன். தற்போது, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
எனவே, வீராணம் ஏரியிலிருந்து 17.8.2013 முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
குடிநீர் பிரச்சினை தீரும்
சென்னையின் குடிநீர் பிரச்சினை இதன் மூலம் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து போனதை அடுத்து தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் மெட்ரோ தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீராணம் ஏரி தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் தினசரி தண்ணீர் விநியோகம் செய்யப்படலாம்.
Chief Minister Jayalalithaa on Friday ordered the release of 185 million litres a day (MLD) of water from the Veeranam tank in Cuddalore district to Chennai for meeting drinking water requirements.