நீர்மூழ்கி விபத்தில் காணாமல் போன 18 பேரில் ஒருவர் தேனிக்காரர் மருமகன்
மும்பை: ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் வெடித்ததில் அதில் இருந்த 18 பேர் காணாமல் போயுள்ளனர். அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் காணாமல் போனவர்களில் ஒருவரான வெங்கடராஜ் உயிரோடு இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தார் நம்புகின்றனர்.
வெங்கடராஜ் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா நந்தன் என்பவரின் மருமகன்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணா நந்தன் தனது மருமகனின் நிலை குறித்து அறிய குடும்பத்தாருடன் மும்பை சென்றுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், என் மருமகன் வெங்கடராஜ் கடற்படையில் கர்னலாக உள்ளார். தற்போது வெடிவிபத்து ஏற்பட்ட கப்பலில் அவருக்கு முக்கிய அறையை ஒதுக்கியிருந்தனர். வெடிவிபத்து நடந்தபோது அவரின் அறைக்கதவு பூட்டியிருந்தது.
அந்நேரத்தில் கதவு திறந்திருந்தால் மட்டுமே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்திருக்கும். அவரது அறைக் கதவு திறக்கப்படாமலேயே உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். அந்த அறையில் 15 நாட்களுக்கு தேவையான உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை உள்ளன.
அதனால் என் மருமகன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம். அந்த அறைக் கதவை திறக்க ரஷ்ய நீர் மூழ்கிக்கப்பலின் அதிகாரிகள் மும்பைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து கதவை திறந்தால் தான் நிலவரம் தெரியும் என்றார்.