கோடி கோடியாக சம்பாதித்து என்ன புண்ணியம்.. சாப்பாட்டுக்குப் பிச்சை எடுக்கும் அவலம்!
மும்பை: மும்பையின் வெர்சோவா பகுதிக்குப் போனால்.. அங்குள்ள ஜேபி சாலைக்கு மறக்காமல் போங்கள்.. அங்கு ஒரு பெண் சாலையோரம் உள்ள குருத்வாரா அருகே பரிதாப நிலையில் அமர்ந்திருப்பார்.. அவர் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் கோடீஸ்வரியாக வலம் வந்த ஒரு பிரபலமான பத்திரிக்கையாளர் சுனிதா நாயக்..
65 வயதாகும் சுனிதா நாயக்.. இன்று எல்லாவற்றையும் இழந்து கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகப் பரிதாபமான சோகக் கதை.
எத்தனையோ பிச்சைக்காரர்களைப் பார்த்து விட்ட மும்பை மக்களுக்கு இவர் இன்னொரு பிச்சைக்காரர்... ஆனால் இவரது கதை மிகப் பரிதாபமாகரமானது, சோகமயமானது.

நிரம்பப் படித்த சுனிதா நாயக்
நிரம்பப் படித்தவர் சுனிதா நாயக். பெரும் பணக்காரர். அருமையான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவர். பை நிறையப் பணத்துடன் வாழ்ந்த அவர் இன்று வைத்துக் கொள்ள ஒரு சின்னப் பை கூட இல்லாமல் பரிதாபமாக காட்சி தருகிறார்.

ஐந்து மொழிகளில் புலமை
மராத்தி, இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் சரளமாக பேசும் திறமை படைத்தவர் சுனிதா நாயக். ஆனால் இன்று அவருக்குத் தெரிந்த ஒரே மொழி... பிச்சை மட்டுமே.

2 மாதமாக 12 வயது நாயுடன் பிளாட்பாரத்தில்
கடந்த 2 மாதமாகத்தான் இந்த பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சுனிதா. அவருக்கு இருக்கும் ஒரே துணை அவரது 12 வயது நாயான சசி மட்டுமே.

என்னதான் நடந்தது...
"சிறு வயதிலேயே எனது பெற்றோரை இழந்து விட்டேன். நண்பர்கள்தான் உதவினார்கள். அந்த உதவியுடன் படிப்பை முடித்தேன். அதுவும் மெரிட்டில். மராத்தி பத்திரிக்கையான கிருஹலட்சுமியில் எடிட்டராக வேலை பார்த்தேன். சில வருடங்களுக்கு முன்பு அதை மூடி விட்டார்கள்".

அந்தக் காலத்து பணக்காரி
அந்தக் காலத்திலேயே பெரும் பணக்காரியாக திகழ்ந்தவர் சுனிதா நாயக். இப்போதைய மதிப்பி்ல அவரது அப்போதைய சொத்து பல கோடி மதிப்பிலானது.

இரண்டு ஃபிளாட்டுகள்
மும்பை ஒர்லியில், 2 பெரிய அபார்ட்மென்ட்களை 80களில் அவர் வைத்திருந்தார். அவையெல்லாம் இன்று பல கோடிக்கு மதிப்பு பெறும். 2007 வரை இந்த வீடுகளில்தான் அவர் மாறி மாறி குடியிருந்துள்ளார்.

புனேவில் பெரிய பங்களா
அதேபோல புனேவில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான பெரிய பங்களா ஒன்றும் இருந்தது.

பஸ்சில் போனதே இல்லை
புகழ் மற்றும் பண பலத்தில் இருந்தபோது அவர் பஸ்சிலோ, ஆட்டோவிலோ போனதே இல்லையாம். எல்லாமே கார்தான். அவரே அழகாக, ஸ்டைலாக கார் ஓட்டிசத் செல்வாராம். 2 கார்கள் வைத்திருந்தாராம்.

6 லட்சத்துக்கு விற்ற புனே பங்களா
"1984ம் ஆண்டு எனது புனே பங்களாவை வெறும் 6 லட்சத்துக்கு விற்றேன். 2007ல் எனது இரு மும்பை ஃபிளாட்டுகளையும் விற்று விட்டேன். கார்களையும் கூட விற்று விட்டேன். மொத்தமாக ரூ. 80 லட்சம் கிடைத்தது. அதை வைத்து தானேவில் ஒரு வீட்டை ஒத்திக்குப் பிடித்துக் குடியேறினேன்.

வேகமாக கரைந்த பணம்
அதற்குப் பிறகு எனது கையிருப்பு வேகமாக கரையத் தொடங்கியது. இதனால் வெர்சோவா வந்தேன். இங்கு சுமாரான வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று தேடினேன். ஆனால் எனக்கு கிடைத்தது இந்த பிளாட்பாரம்தான்... குருத்வாராவுக்கு வருவோர் கொடுக்கும் பணத்தை வைத்துக் காலம் தள்ளுகிறேன்... இவர்கள் பெருந்தன்மையானவர்கள். எனக்கு தங்குவதற்காக அருகிலேயே சின்னதாக ஒரு பந்தல் போட்டுக் கொடுத்துள்ளனர். சாப்பாடும் தருகின்றனர்".

எப்படிப் போச்சுன்னே தெரியலையே...
என்னிடம் இருந்த பணமெல்லாம் எப்படி கரைந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. எனது வங்கிக் கணக்குகளை எனது முன்னாள் ஊழியர் கமல் ரெய்க்கர்தான் பார்த்து வந்தார். அவர் பெரும் பணத்தை எடுத்திருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன். அவரை தற்போது என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய மொபைல் போனில்தான் பலருடைய எண்கள் இருந்தன. போன் தண்ணீரில் விழுந்து சேதமடைந்து போனதால் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டது.

நாயை விட்டு வர முடியாது
என்னுடைய நண்பர்கள் பலர், நலம் விரும்பிகள் பலர் தங்களுடன் வந்து தங்குமாறு அழைத்தனர். ஆனால் எனது நாயை விட்டு விட்டு வருமாறு கூறினர். அதற்கு இருக்கும் ஒரே ஆதரவு நான்தான். இதனாலேயே என்னால் எங்கும் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

வேலை கிடைத்தால் பார்க்கத் தயார்
நான் நன்கு படித்தவள். ஐந்து மொழிகளில் சரளமாக பேசுவேன். இப்போது வேலை கிடைத்தாலும் பார்க்க நான் தயார். புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆர்வமாகவே இருக்கிறேன்... எனக்கு யாரும் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. வேலை கொடுங்கள் பார்க்கிறேன், அதற்கான ஊதியத்தைக் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார் சுனிதா நாயக்.












Click it and Unblock the Notifications