2050க்குள்ளாற கொல்கத்தா, மும்பைக்குப் போய்ட்டு வந்துடுங்க.. இல்லாட்டி!
டெல்லி: மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடலால் பேராபத்து காத்திருக்கிறதாம். 2050ம் ஆண்டுக்குள் இந்த நகரங்களை கடல் கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
மாறி வரும் இயற்கையும், தட்பவெப்ப மாற்றம் மற்றும் புவி வெப்ப அதிகரிப்புமே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
என்னதான் பாதுகாப்பைப் பலப்படுத்தினாலும் கூட இந்த இரு நகரங்களையும் கடல் காவு கொள்வதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது சிரமம் என்கிறார்கள்.
மும்பைக்குத்தான் பேரழிவு
இந்த இரு நகரங்களிலும் மும்பைதான் பெரும் அழிவைச் சந்திக்குமாம். அதாவது 600 கோடி டாலர் அளவுக்கு இந்த நகரம் பேரழிவை சந்திக்குமாம்.
கொல்கத்தா கொஞ்சம் பரவாயில்லை
அதேசமயம் கொல்கத்தா நகருக்கு 300 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுமாம்.
136 நகரங்களுக்கு ஆபத்தாம்
இந்த இரு நகரங்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் 136 பெரிய கடலோர நகரங்களுக்கும் ஆபத்து இருக்கிறதாம். இதனால் ஒட்டுமொத்தமாக 750 பில்லியன் ஈரோ அளவுக்கு இழப்பு ஏற்படுமாம்.
பாதுகாப்பைப் பலப்படுத்தினால் குறைக்கலாம்
ஒருவேளை பாதுகாப்பை மிகத் தீவிரமாக பலப்படுத்தினால் இந்த பேரழிவின் நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியுமாம். இல்லாவிட்டால் கோவிந்தாதானாம்.
மக்கள் தொகை அதிகரிப்பே காரணம்
மக்கள் தொகை அதிகரிப்பும், புவிவெப்ப மயமாதலும் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
வருடாவருடம் 600 கோடி டாலர் இழப்பு
வருடந்தோறும் வெள்ளம் காரணமாக உலகம் முழுவதும் 600 கோடி டாலர் மதிப்பிலான சேதத்தை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன் என்று ஒரு கணக்கு கூறுகிறது.