பாகிஸ்தானின் முக்கிய ரத்த நாளம் காஷ்மீர்.. ஷெரீப் பரபரப்புப் பேச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்குச் சொந்தமானது காஷ்மீர் என்று பொருள்படும் வகையில் அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரை, பாகிஸ்தானின் முக்கியமான ரத்தநாளம் என்றும், பாகிஸ்தானின் தேசியப் பிரச்சினை என்றும் வர்ணித்துள்ளார் ஷெரீப்.
தேவையில்லாமல் போர்களில் ஈடுபட்டு இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது சக்தியை வீணடிக்காமல், இரு நாடுகளையும் பீடித்திருக்கும் ஏழ்மை மற்றும் வறுமையை ஒழிக்க இணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்லார்.
ஜூன் மாதம் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்தான் இப்படிப் பேசியுள்ளார் ஷெரீ்ப். நவாஸ் ஷெரீப்பின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...
காஷ்மீர் தேசியப் பிரச்சினை
காஷ்மீர் விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினையாகும். பாகிஸ்தானின் முக்கிய ரத்த நாளம் காஷ்மீர். காஷ்மீர் தொடர்பான ஐ.நா. தீர்மானம் என்னைப் போலவே ஒவ்வொரு பாகிஸ்தானியரின் நெஞ்சத்திலும் பதிந்து போயுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல்
பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் பாகிஸ்தானால் எதையும் சாதிக்க முடியாது.
காஷ்மீரோடு பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும்
காஷ்மீர் பிரச்சினையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கூடவே பொருளாதாரத்தை பலப்படுத்தும் வழிகளையும் நாம் காண வேண்டும்.
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்
அத்தோடு உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகள், வெளிநாடுளிலிருந்து சந்திக்கும் பிரச்சினைகளையும் நாம் தீர்த்தாக வேண்டும்.
மின்சாரப் பற்றாக்குறை
மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.
இந்தியாவுடன் நல்லுறவு அவசியம்
இந்தியாவுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரு நாடுகளும் தேவையில்லாத போர்களில் ஈடுபட்டு சக்தியை வீணடிக்காமல், இரு நாடுகளிலும் நிலவும் நோய்கள், ஏழ்மை, வறுமை ஆகிய பிணிகளை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பொதுப் பிரச்சினைகளில் கை கோர்ப்போம்
வறுமை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
நல்லுறவே நல்லது
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், எந்த ஒரு நாடுமே தனது அக்கம் பக்கத்து நாடுகளுடன் நல்லுறவைப் பேணினால் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை நாம் அறியலாம்.
இதனால்தான் சொல்கிறோம்
இதனால்தான் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது.
மக்கள் ஆதரவு
இந்தியாவுடன் நல்லுறவு தேவை என்பதை நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன். மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் எனது கருத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துத்தான் ஆட்சியில் அமர்த்தினர்.
தாயகத்தை காக்க நாடு தயார்
நமது நாட்டு மக்களும், படையினரும், நமது தாயகத்தைக் காக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். ஆயத்தமாக உள்ளனர் என்றார் அவர்.