இறந்து போன பெண் 42 நிமிடங்கள் கழித்து உயிர்பிழைப்பு: ஆஸி. மருத்துவர்கள் சாதனை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு நின்ற பெண்ணுக்கு சுமார் 42 நிமிடங்கள் கழித்து மீண்டும் இதயத்துடிப்பை மருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் விற்பனை பிரதிநிதியான வானெஸா தனாசியோ(41). 2 குழந்தைகளுக்கு தாயான அவருக்கு கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மெல்போர்னில் உள்ள மோனஸ் இதய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட உடனே அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது இதயத்துடிப்பு நின்ற 42 நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் உயிர் பெற்றார். அதிநவீன கருவியின் உதவியுடன் மருத்துவர்கள் அவரின் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தனர்.
வானெஸா உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வானெஸா கூறுகையில்,
நான் அருமையாக உணர்கிறேன். சுமார் 1 மணிநேரம் இறந்திருந்த ஒருவருக்கு நான் நலமாக உள்ளேன். எனக்கு இதய பிரச்சனை இருந்ததில்லை. அப்படி இருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டது ஆச்சரியமாக உள்ளது. என் குழந்தைகளுக்காக நான் இங்கு உள்ளேன் என்பது ஆறுதலாக உள்ளது என்றார்.