அமெரிக்காவில் 'போர்' அடித்ததால் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரரை கொன்ற சிறுவர்கள்
டங்கன்: அமெரிக்காவில் போர் அடித்ததால் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரரை கொன்ற 3 சிறுவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லேன்(22). அவர் ஆஸ்திரேலியாவில் கால்பந்து வீரராக இருந்தார். பின்னர் அதைவிட்டு விட்டு அமெரிக்காவுக்கு வந்து பேஸ்பால் வீரராக மாறினார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஜாகிங் சென்றபோது டங்கன் பகுதியில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 15, 16, 17 வயது சிறுவர்கள் போர் அடித்ததால் கிறிஸ்டோபரை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.
அதில் 15, 16 வயது சிறுவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 17 வயது சிறுவன் சம்பவம் நடந்தபோது வாகனத்தை ஓட்டியதால் அவன் மீது கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 17 வயது சிறுவன் தான் தான் கிறிஸ்டோபரை கொன்றதாகக் கூறினான். அதற்கு அவனை அமைதியாக இருக்குமாறு நீதிபதி கூறினார்.
கிறிஸ்டோபர் கொல்லப்பட்டதால் அவரது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கில் அவரது காதலி கலந்து கொண்டு கண்ணீர் விட்டார்.