6 காட்டு யானைகளை விரட்ட திருவண்ணாமலைக்கு வந்த ‘கும்கி’ யானைகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானைகளை அடக்க முதுமலை சரணாயலத்தில் இருந்து கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கவுண்டன்ய வனபகுதியில் இருந்து தப்பி வந்த 10க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் ஜவ்வாதுமலை பகுதியில் புகுந்தது.
இந்த யானைக் கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் சுற்றி திரிந்து விளை நிலங்கள், வீடுகளை நாசம் செய்து வருகிறது.
10 யானைகளில் பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 35 வயது கொண்ட 2 பெண் யானைகள், 5 வயதுள்ள குட்டி யானை ஒன்று, 18 வயது முதல் 24 வயது வரை யிலான 3 ஆண் யானைகள் என மொத்தம் 6 யானைகள் மட்டுமே உள்ளன.
இந்த யானைகளை கூண்டோடு பிடிக்க வனத் துறையினர் திட்ட மிட்டுள்ளனர்.இதற்காக முதுமலை சரணாலயத்தில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
மயக்க ஊசி மூலம்
திருவண்ணாமலை அடுத்த மேல்செங்கம் பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் மத்திய விவசாய பண்ணை உள்ளது. இப்பகுதிக்குள் 6 யானைகளையும் விரட்டி சென்று கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி போட்டு பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப், தெப்பங்காடு பகுதிகளில் இருந்து 5 கும்கி யானைகள் மேல்செங்கம் விவசாய பண்ணைக்கு இன்று அதிகாலை 2 மணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள்
யானைகளை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள வனத் துறை உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர், காவல்துறை, மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் உதவியுடன் நாளை அல்லது திங்கள் கிழமை யானைகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
முகாமிட்ட யானைகள்
தற்போது யானைக் கூட்டம் விவசாய பண்ணையிலிருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள இத்தனூர் பகுதியில் முகாமிட்டுள்ளது.
யானைகளுக்கு செலுத்த வேண்டிய மயக்க மருந்துகள் டெல்லியில் இருந்து விமானம் மூலமும், சங்கிலிகள் சென்னையில் இருந்தும், மயக்க மருந்து செலுத்த தேவையான துப்பாக்கிகள் முதுமலை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது.
பிடிபடும் யானைகளை ஏற்றி செல்வதற்கு தேவையான 6 பெரிய அளவிலான லாரிகளும் வரவழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நாளை தயாராகிவிடும்.
எனவே நாளை ஞாயிற்றுக் கிழமையில் இருந்து யானைகளை பிடிக்கும் பணி தொடங்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 யானைகள்
ஒரே நேரத்தில் 6 யானைகளை மயக்க ஊசி போட்டு பிடிப்பது என்பது கடிமான செயல். இந்தியாவில் இதுபோன்ற தொரு சம்பவம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
நாட்டிலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்ற கடினமான பணியில் வனத் துறையினர் ஈடுபடுகின்றனர். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.