வரும் தீபாவளிக்கு 'அடைமழை' கன்பார்ம்...: அட்வான்சாக ‘தீபாவளி’ கொண்டாடிய 40 கிராமங்கள்
போபால்: இந்தாண்டு கொண்டாடப்பட இருக்கின்ற தீபாவளியன்று அடைமழை பெய்ய இருப்பதாகவும், அதனால் பட்டாசு வெடிக்க இயலாது என கிளம்பிய வதந்தியை அடுத்து மத்தியப்பிரதேசத்தில் உள்ள 40 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முன்கூட்டியே தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்து விட்டார்களாம்.
‘ எப்படியெல்லாம் கிளப்புறாய்ங்கய்யா பீதிய..' என வடிவேலு ஒரு படத்தில் டயலாக் பேசுவார். அதுபோலத் தான் இந்த வதந்தி பரப்புகிறவர்களும் போல. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ..?
இப்படித்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது மத்தியபிரதேசத்தில் பரவிய வதந்தியைக் கேட்டால்....

அட்வான்ஸ் தீபாவளி...
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 2-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட அதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முன்கூட்டியே பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்த்து விட்டார்களாம்.

விசித்திர வதந்தி....
மத்தியப்பிரதேசத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோல் பட்டாசு வெடித்து கடந்த 4-ந்தேதி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி விட்டனர். ஏன் இப்படி அவரச தீபாவளி, என்றால் அதற்கு காரணமாக விசித்திர வதந்தி ஒன்றைச் சொல்கிறார்கள் அம்மக்கள்.

அடடா மழைடா...அடை மழைடா
அதாகப்பட்டது, இந்தாண்டு தீபாவளியன்று கடும் மழை பெய்ய இருப்பதால் யாரும் பட்டாசு வெடிக்க முடியாது என யாரோ கொளுத்திப் போட, பட்டென்று பற்றிக் கொண்டது வதந்தி.

குடும்பத்துக்கு ஆகாது....
அத்தோடு விட்டார்களா...தீபாவளிக்கு புதுத் துணி வாங்க கடைகளுக்கும் போக முடியாது. அதற்காக தீபாவளி கொண்டாடா விட்டால் தலைப்பிள்ளைக்கு ஆபத்து. வீட்டில் துன்பம் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டுமானால் முன்கூட்டியே தீபாவளி கொண்டாட வேண்டும். 3 முறை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்றும் தகவல் பரவியது.

கொண்டாட்டம்
இதைக் கேட்டு பதறிப்போன கிராம மக்கள் உடனடியாக பட்டாசு வெடித்தும், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியும் தீபாவளியை கொண்டாடி விட்டனர் படு ஜோராக.

நல்ல பிசினஸ்...
இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களில் அன்றைய தினம் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. வேலையில்லாமல் இருந்தவர்கள் பட்டாசு மற்றும் தீபாவளி பொருட்கள் விற்பனை கடைகள் வைத்து பணம் சம்பாதித்துள்ளார்கள். கோவிலுக்கு செல்லும் ஜீப்கள், வேன்களில் கூட்டம் அலைமோதி காணப்பட்டதாம்.

15 நாளும் தீபாவளி தான்...
இது குறித்து மகேந்திரவாடி கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் நரேந்திரா தெரிவித்ததாவது, "எனது கிராமத்தில் மக்கள் கடந்த 4-ந்தேதி தீபாவளி கொண்டாடினார்கள். தொடர்ந்து 15 நாட்களுக்கு விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும் தீபாவளி இனிப்பு பலகாரங்கள் செய்து விருந்தளித்தனர். தீபாவளியையொட்டி சல்கான்பூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அதிக கட்டணம்....
முன்கூட்டியே தீபாவளி கொண்டாடியதால் வேன், ஜீப், டிரைவர்கள் வழக்கத்தை விட கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒரு நடைக்கு ரூ.3,000 முதல் 3,500 வரை சம்பாதித்தனர். எனவே இந்த வதந்தியை டிரைவர்களும், வியாபாரிகளும் கிளப்பி விட்டிருக்கலாம் என கருதுகிறேன்' எனக் கூறியுள்ளார்.

உண்மைனு நம்பி....
இது குறித்து கிராம அதிகாரிகள் கூறும் போது, படிப்பறிவில்லாத கிராம மக்கள் மூடப்பழக்கத்தால், வதந்தியை நம்பி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு படிப்பறிவு வழங்க முயற்சி செய்கிறோம்.ஆனால் யாருமே வதந்தியை வதந்தி என்று நம்பாமல் உண்மை என்று நம்புகிறார்கள்' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications