என் மகன் தவறு செய்திருந்தால் அவனை சும்மாவிடக் கூடாது: மும்பை கற்பழிப்பு குற்றவாளியின் தாய்
மும்பை: என் மகன் குற்றவாளி என்றால் அவனை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று மும்பை பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்த 5 பேரில் ஒருவரான காசிமின் தாய் சாந்த் பி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள சக்தி மில்ஸ் கட்டிடத்தில் 22 வயது பத்திரிக்கை புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கைதான 5 பேரில் ஒருவரான முகமது காசிம் முகமது ஹபீஸ் ஷேக்கின்(21) தாய் சாந்த் பி கூறுகையில்,

என் மகன் காசிம் இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளான் என்று என்னால் நம்ப முடியவில்லை. கடந்த வியாழக்கிழமை காசிம் லேட்டாக வீட்டுக்கு வந்தான். சாப்பிட்ட பிறகு ஏதோ செல்போனில் அழைப்பு வந்தவுடன் வெளியே சென்றுவிட்டான். அந்த அழைப்பு போலீசாரிடம் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு அவன் வீட்டுக்கே வரவில்லை. கடந்த சனிக்கிழமை அவன் கைது செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன். இந்த வழக்கில் கைதானவர்களை என் மகனுக்கு தெரியும் என்பதால் அவனை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.
எனக்கும் மகள்கள் உள்ளனர். அந்த பெண் என்ன கஷ்டப்படுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பெண் காசிம் தன்னை கெடுத்ததாக அடையாளம் காட்டினால் அவனை தண்டிக்க வேண்டும். அதன் பிறகு அவனுக்கு என்ன தண்டனை அளிப்பது என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications