இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 35 பேர் கைது
ராமேஸ்வரம்: ரமேஸ்வரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
பாம்பனில் இருந்து நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் மீன்பிடித்து விட்டு இன்று காலை கரை திரும்ப வேண்டும். இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற படகுளில் பாம்பனைச் சேர்ந்த வில்சன், மச்சிநாதன், கொலம்பஸ் ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளும் அதில் சென்ற 35 மீனவர்களும் கரை திரும்பவில்லை.
இதனிடையே பாம்பன் மீனவர்கள் 35 பேரையும் நேற்று இரவு இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று மன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சிங்கள மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் சிறைபிடித்தனர். இதற்கு போட்டியாக பாம்பன் மீனவர்களை சிறை பிடித்திருக்கலாம என தெரிகிறது.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் 106 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.