ஜிப்மரில் ‘பெயர்’ குழப்பம்: 2 குழந்தைகளின் உண்மையான தாயைக் கண்டறிய மரபணு சோதனை
புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த திருநாவுக் கரசு என்பவரது மனைவி விஜய லட்சுமியும், திலாசு பேட்டையை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி அனிதாவும் பிரசவத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று, காலை 6 மணிக்கு முதலில் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 6.10 மணிக்கு அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பொதுவாக ஜிப்மர் மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் கையில் அதன் தாயார் பெயரை எழுதி ஒட்டுவது வழக்கம். அதன்படி, இரண்டு குழந்தைகளின் கையிலும் பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஆனால், இரண்டிலுமே அனிதாவின் பெயரெ எழுதப்பட்டிருந்ததால் குழப்பம் உண்டானது.
குழப்பத்தை அறிந்த இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் தாயின் முகச்சாயலை வைத்து தற்காலிகமாக குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனபோதும், குழந்தைகளின் உண்மையான பெற்றோரை உருதி செய்யும் வகையில் மரபணு சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரபணு சோதனை செய்யும் வசதி ஜிப்மர் மருத்துவமனையில் இல்லாத காரணத்தால், ஹைதராபாத் மருத்துவமனையில் இச்சோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. முடிவுகள் தெரிய எப்படியும் 20 நாட்களுக்கு மேலாகும் என்பதால் அதுவரை இரண்டு குழந்தைகளையும், அவர்களின் தாயாரையும் மருத்துவமனையிலேயே தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.