தீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்!
தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை இருந்து சென்னையில் ஏராளமானோர் வேலை நிமித்தமாக குடியேறியுள்ளனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் தென் மாவட்ட மக்கள் அதிகம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சனிக்கிழமை வருவதால், அக்டோபர் மாதம் 30, 31ஆம் தேதிகளில் பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
முக்கியமாக, சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை போன்ற தென்மாவட்டங்களுக்கு கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். எனவே, ரயில்களில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தீபாவளி பண்டிகை தேதியிலிருந்து 120 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம் என்று விதி இருந்தது. இப்போது இந்த விதிகள் 60 நாள்களாகக் குறைக்கப்பட்டு இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பயணிகளிடையே பெருமளவு ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்
இதேபோல், தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.