காற்று குறைந்தது.. மின் உற்பத்தி இறங்கியது.. மீண்டும் பல இடங்களில் 'பவர் கட்'!
சென்னை: கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட 24 மணி நேரமும் மின்சார விநியோகம் என்று இருந்த சந்தோஷ நிலை மாறி - சென்னை தவிர - தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கொடுமையான மின்வெட்டிலிருந்து தப்பி சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்கள் இந்த மின்வெட்டால் மறுபடியும் சோர்வடையத் தொடங்கியுள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால்தான் இந்த மின்வெட்டு என்று கூறப்படுகிறது.
பல மணி நேர மின்வெட்டில் சிக்கித் தவித்த தமிழகம்
சில மாதங்களுக்கு முன்பு வரை பல மணி நேர மின்வெட்டில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது தமிழகம்.
ஷிப்ட் முறையில் வெட்டு
ஷிப்ட் முறையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் அதிகபட்சம் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
மழையும் - காற்றும்
இந்த நிலையில், தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் மின்வெட்டு கிட்டத்தட்ட முழுமையாக நீங்கியது.
எங்கு பார்த்தாலும் கரண்ட்...
கார்ட்டூன் போட்டுக் கிண்டலடிக்கும் வகையில் இருந்த தமிழக மின் நிலை அப்படியே முழுமையாக மாறியது. மின்வெட்டு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு மின்வெட்டு முழுமையாக அகன்றது.
24 மணி நேர மின்சாரம்
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அறவே நீங்கியது அல்லது மின்வெட்டு மிக மிக குறைவாக இருந்தது.
காற்று நின்றது
இந்த நிலையில் தற்போது காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 3,200 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி, நேற்று காலை நிலவரப்படி 360 மெகாவாட்டாக குறைந்தது.
மத்திய மின்சாரமும் குறைந்தது
அதேபோல, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தின் அளவும் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகத்தின் மொத்த மின்தேவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1650 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவியது.
மறுபடியும் முதல்ல இருந்தா...
இந்த மின்வெட்டு மக்களிடையே மறுபடியும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஷிப்ட் போட்டு கரண்டடை கட் செய்யப் போகிறார்களோ என்ற அச்சமும் அவர்களிடையே எழுந்துள்ளது.
அதற்குள் லோக்சபா தேர்தல் வந்து விட்டால் நல்லாருக்கும்...!!