நீரா ராடியா டேப் வழக்கு விசாரணை.. உச்சநீதிமன்றத்தில் மூடிய அறையில் விசாரணை!
டெல்லி: நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மூடிய அறையில் நடைபெற்றது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப் விவகாரம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருடனும் நீரா ராடியா பேசிய தொலைபேசிய உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீராவின் தொலைபேசி உரையாடல்கள் கசிய விடப்பட்டதற்கு எதிராக தொழில் அதிபர் ரத்தன் டாட்டா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டு இருப்பதால், மூடிய அறைக்குள் வாதங்களை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூடிய அறைக்குள் மத்திய அரசின் வாதம் கேட்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து இன்று சுமார் 2 மணி நேரம் மூடிய அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இரண்டு சொலிசிடர் ஜெனரல், சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.