இனி வங்கிகள் மூலமே பொதுமக்கள் தங்கத்தை விற்கலாம்!
டெல்லி: இனி பொதுமக்களிடமிருந்து வங்கிகள் தங்கம் வாங்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்தப் போவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. அது, 9 ஆயிரம் கோடி டாலரை நெருங்கி வருகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ள உலகின் 3-வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் நாணயமாக ரூபாய் மாறியுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதற்கு தங்கம் இறக்குமதி அதிகமாக இருப்பதே முக்கிய காரணம் ஆகும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக அளவில் தங்கம் அதிகமாக பயன்படுத்தப்படுவதும், இந்தியாவில்தான்.
வரி உயர்வு
தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கம் மீதான இறக்குமதி வரி, 3 மடங்கு உயர்த்தப்பட்டது.
தங்க நகைகள் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இதனால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.
அதிரடி திட்டம்
இந்நிலையில், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும் ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதுதான், வங்கிகள் மூலம் பொது மக்களிடம் தங்கத்தை விலைக்கு வாங்கும் திட்டம் ஆகும். அப்படி வாங்கும் தங்கத்தை, தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனங்களிடம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து சில வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பொது மக்களிடம் தங்க நகைகள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களை கவருவதற்காக, நகை கடைகள் கொடுப்பதை விட அதிகமான விலை கொடுத்து நகைகளை வாங்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என வங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில், தற்போது 31 ஆயிரம் டன் தங்கம், விற்பனைக்காக புழக்கத்தில் உள்ளது. இதில் எவ்வளவு தங்கம் திருப்பி விடப்பட்டாலும், உள்நாட்டு தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
அடகு வைக்கும் யோசனை இல்லை
கடந்த 1991-ம் ஆண்டு, ஐரோப்பாவில் 67 டன் தங்கத்தை இந்தியா அடகு வைத்தது.
இந்த தங்கத்தை வாகனங்களில் விமான நிலையத்துக்கு எடுத்துச் சென்றபோது ஒரு வாகனம் நின்றுவிட்டபோதுதான் விஷயம் வெளியில் தெரிய வந்தது.
ஆனால், மத்திய அரசுக்கு இந்த முறை அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications