மேலும் கடுமையான முடிவுகள்- பெட்ரோல், டீசல் விலை உயரும்!- மன்மோகன் சிங்
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை ஸ்திரமாக வைக்க மேலும் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. பெட்ரோல், டீசலுக்கான மானியங்கள் குறைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதன் மூலம், எரிபொருள் விலைகள் கடுமையாக உயரும் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளது அரசு.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிலையின்மை குறித்து பாராளுமன்றத்தில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக வைத்திருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது நிச்சயமாக அதிர்ச்சி தரும் நிகழ்வுதான். இந்த பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்பு அவ்வளவாக கடுமை இல்லாத பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இனி மானியத்தைக் குறைப்பது, காப்பீடு, ஓய்வூதியத் துறையில் சீர்திருத்தம் போன்ற மிகக் கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது எளிதானது அல்ல," என்றார்.
அனைத்து மானியங்களையுமே குறைப்பதுதான் இப்போதைக்கு அரசின் முன் உள்ள ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இறக்குமதிகளை வெகுவாகக் குறைக்கவிருப்பதாகவும் தன் பேச்சில் தெரிவித்தார்.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் மக்களுக்கு மானிய விலையில் கிடைக்கும் பல அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர வாய்ப்பிருக்கிறது.