திமுக-தேமுதிக- காங். கூட்டணி: கனிமொழியுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி
டெல்லியில் அண்மையில் ராகுல் காந்தி தமது இல்லத்தில் கனிமொழியுடன் கூட்டணி குறித்து விரிவாக ஆலோசித்து உள்ளார். அப்போது திமுக- காங்கிரஸ் அணியில் 10% வாக்குகள் உள்ள தேமுதிகவும் இணைந்தால் வலுவான அணியாக இருக்கும் என்று ராகுல் காந்தி, கனிமொழியிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த சந்திப்பு பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கனிமொழி மறுத்துள்ளார்.
மேலும் இது சாதாரணமான சந்திப்புதான்.. இதில் எந்த ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்றும் கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் ஆகஸ்ட் 25-ந் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் திருச்சி சிவாவின் இடத்தை திமுக கோராமல் விட்டுக் கொடுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் திமுக இடம்பெறாத நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஜேபிசியின் இறுதி அறிக்கை ஆ. ராசாவை குற்றம்சாட்டியே வெளிவரக் கூடும். அப்படி வரும்நிலையில் ஆ.ராசாவை தேர்தலில் நிறுத்தாமல் தவிர்த்துவிடவும் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைமை வலியுறுத்தலாம். இதனால் தேர்தலில் காங்கிரஸ்- தேமுதிக- திமுக உறவை ஊழலின் பெயரில் எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் தவிர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதாம்.
இது தொடர்பாகவும் கனிமொழியிடம் ராகுல் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.