போலி என்கவுண்டர் வழக்குகளில் எங்களை காக்க மோடி தவறி விட்டார்- ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா
காந்திநகர்: போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் ஆன குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி.வன்சாரா தற்போது தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு போலி என்கவுண்டர்களில் சிக்கிய தன்னையும், பிற காவல்துறை அதிகாரிகளையும் காக்காமல், தங்களைக் காக்கவே முதல்வர் நரேந்திர மோடியும், முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் முயல்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி தரப்புக்கு ஆதரவானவர் என்று கருதப்பட்ட வன்சாரா இப்படி திடீரென பல்டி அடித்திருப்பதால் புதுப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு போலி என்கவுண்டர் வழக்குகளில் சிக்கியவர் வன்சாரா என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பதவியை ராஜினாமா செய்து குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் வன்சாரா. அதில், முதல்வர் மோடியையும், ஷாவையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்தக் கடிதத்தில், முதல்வர் மோடியும், முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவும் காவல்துறையினரைக் காக்க முயற்சிக்கவில்லை. மாநிலக் காவல்துறையினரின் நலனில் இருவருக்கும் அக்கறை இல்லை.
பல்வேறு போலி என்கவுண்டர் வழக்குகளில் என்னை அரசு ஆதரிக்காதது அதிர்ச்சி தருகிறது. மாநில காவல்துறையினரை தனது அரசியல் லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தியவர் அமீத் ஷா.
போலி என்கவுண்டர் வழக்குகளில் தங்களைக் காத்துக் கொள்ளவே முயல்கின்றனர் மோடியும், ஷாவும். இதில் ஈடுபட்ட அத்தனை காவல்துறையினரையும் சிறையில் வைக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் வன்சாரா.