ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்குவதை ஏற்க மாட்டோம்: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எச்சரிக்கை
ஹைதராபாத்: ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஏற்கவே முடியாது என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எச்சரித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலமாக ஆக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க எதிர்ப்பு தெரிவித்து சீமந்திரா பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானாவை பிரிப்பது குறித்து இன்னும் 20 நாட்களில் அமைச்சர்கள் குழு கூடி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டெ தெரிவித்துள்ளார். அவ்வாறு பிரிக்கப்போடும்போது தற்போதைய தலைநகர் ஹைதராபாத் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு தலைநகராக 10 ஆண்டுகள் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மக்களால் உருவாக்கப்பட்ட ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க ஒருபோது அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.