500 கிலோமீட்டர் தூரத்திற்கு கோப்புகளுடன் அதிகாரிகளை அலைய வைக்கும் ஜெ.: ஸ்டாலின் புகார்
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மாற்று கட்சியில் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்துள்ளனர். திமுகவில் இணைந்த அனைவருக்கும் நல்ல எதிர் காலம் உண்டு. சிலர் கட்சியை ஆரம்பித்தவுடன் நான்தான் முதல்வர் என்கிறார்கள். சிலர் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நான்தான் முதல்வர் என்கிறார்கள்.
1949ல் தொடங்கப்பட்ட திமுக 1957ல் சட்டமன்றத்தில் போட்டியிட்டது. 1967ல் ஆளுங்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி பொறுப்புக்கு வந்தது.பல்வேறு இன்னல்களை சந்தித்த பின்னர் தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. 1957ல் திருத்துறை பூண்டி தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி இதுவரை தோற்றதே இல்லை. திமுக சந்திக்காத வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.
நாம் வெற்றியை கண்டு மகிழ்ந்ததும் இல்லை. தோல்வியை கண்டு துவண்டதும் இல்லை. தமிழக மக்களை பொறுத்தவரை எதிர்க்கட்சியும் நாம்தான், ஆளுங்கட்சியும் நாம்தான் என எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஜெயலலிதா ரத்து செய்துவிட்டார். 90 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளதாகவும், மீதம் 10 சதவீத பணிகள் நடக்கவில்லை என கூறி புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தவில்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணம், புதிய தலைமை செயலகத்திற்கும், பழைய தலைமை செயலகத்திற்கும் நீண்ட தூரம் உள்ளது. கோப்புகளை கொண்டு செல்ல நேரம் விரயம் ஆவதுடன் அதிக பொருட்செலவு ஆகும் என கூறினார்.
ஆனால், 500 கிலோ மீட்டர் தூரமுள்ள கோடநாடுக்கு அரசு கோப்புகளை எடுத்து கொண்டு செல்ல அரசு அதிகாரிகளை அலைய வைப்பதில் என்ன செலவாகும். மக்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார் அவர்.