பல்வேறு திட்டங்கள் முடக்கம்: ஜெ. யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் முடங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான உயர்நிலை பறக்கும் சாலைத் திட்டத்துக்கு கடந்த 8-1-2009-இல் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் இந்தத் திட்டம் இப்போது முடங்கியுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 873 கோடி இழப்பீடு தர வேண்டும் என இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்த ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான 54 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ. 617 கோடியில் நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டம், சிங்கப்பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையும், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் ரூ. 20.89 கோடியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம், திருச்சி - காரைக்குடி இடையே 107 கிலோ மீட்டருக்கு ரூ. 374 கோடியில் சாலைகளை மேம்படுத்தும் திட்டம், சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத் திட்டம் ஆகியவை பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளன.
துறைமுகம் - மதுரவாயல் உயர்நிலை பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவுபடுத்தக்கோரி கடந்த 17-8-2013-ல் சென்னை நெற்குன்றத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் யோசித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.