எருதுவிடும் விழாவில் இளைஞர் பலி.. போலீசாரை கல்வீசி தாக்கிய பொதுமக்கள்.. 37 பேர் மொத்தமாக கைது!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டி இளைஞர் பலியான நிலையில், காவல்துறையினர் வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த மோதலில் காவலர் திருமால் காயமடைந்த நிலையில், 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கல்நார்சாம்பட்டியில் எருது விடும் விழாவில் மாடு முட்டி விழுந்த இளைஞரை காவல்துறை தாக்கியதால் இறந்துவிட்டதாக கூறி போ லீசாரை முற்றுகையிட்ட மாடுபிடி வீரர்களால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் திருவிழா முடிந்த அடுத்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் எருது விடும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று எருதுவிடும் விழா நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற எருதுவிடும் விழாவில், ஏராளமான மாடுகள் சீறி பாய்ந்தன.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 8 மணி முதல் 2 மணி வரை அளவு எருது விடும் திருவிழா நடைபெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலை 3 மணி வரை இந்த இறுதி விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது 2.30 மணி அளவில் திடீரென எருது ஒன்று சீறிப் பாய்ந்தது. அப்போது பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற இளைஞரை மாடு முட்டியதில் காயமடைந்து கீழே விழுந்தார்.
ஆனால் இதனையறியாமல் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே அதிக ரத்தங்கள் வெளியேறி மயக்கம் அடைந்தார். மேலும் முறையான மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சக நண்பர்களே முஷரப்பை தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முஷரப் உயிரிழந்தார்.
இந்த தகவலையடுத்து ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறை வாகனங்கள் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில், காவலர் திருமால் காயமடைந்தார். இந்த நிலையில் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications