போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்துக்கு வரும் தொழில் நிறுவனங்கள்! நெஞ்சை நிமிர்த்தி ஸ்டாலின் பெருமிதம்!
அரியலூர்: போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்துக்கு தொழில் நிறுவனங்கள் வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களாக எட்டு கால் பாய்ச்சலில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்த்து வருவதாக அவர் மார்தட்டியுள்ளார்.
அரியலூரில் அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

கடும் போட்டி
போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது.ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம்.
அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம்.வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது.
வேளாண் பாசனப் பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது.உயர்கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறோம்.

கட்டணமில்லா பேருந்து வசதி
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்னால் மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருக்கக் கூடிய பேராசிரியர் ஜெயரஞ்சன் என்னிடத்தில் ஒரு அறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் பேருந்துகளில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதால் மாதத்துக்கு சுமார் தொள்ளாயிரம் ரூபாய் சேமிக்க முடிகிறது என்றும் இதனால், மாத வருமானத்தில் பெருமளவு பணத்தை சேமிக்க முடிகிறது என்றும் - இந்த சேமிப்புப் பணத்தை குடும்பத்தின் வளர்ச்சிக்காகச் பெண்களால் செலவு செய்ய முடிகிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

பண வீக்கம்
சில்லறை பணவீக்கத்தில் இருந்து பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க இத்திட்டம் உதவுவதாக பிரபலமான 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேடு எழுதி இருக்கிறது. ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான மகளிர் சமுதாயத்தின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க முடிந்திருக்கிறது.பதினைந்து மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

அதிக தொழிற்சாலைகள்
ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம். கொரோனாவை வென்று காட்டினோம்.
மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழேதான் இருக்கிறது.

எட்டு கால் பாய்ச்சலில்
கடந்த ஆட்சியில், பத்தாண்டு காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும், அதற்கு முன்பு, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டு கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமைதான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.












Click it and Unblock the Notifications