"எங்கே 'சோழகேரளன் திருமாளிகை?’ - அரியலூர் வரலாற்றை மீட்டெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்
அரியலூர்: திமுகவுக்கும் அரியலூருக்கும் ஓர் அழகான உறவு இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் 1953 ஜூலை 15 ஆம் நாள் முக்கியமான நாள். அது என்னவென்று கேட்கிறீர்களா?
வகுப்பறைக்குள்ளே குட்டி விஞ்ஞானிகள்! - ரூ.25 கோடியில் ஸ்டாலின் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்
டால்மியாபுரமும் மு.கருணாநிதியும்
தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் காட்டுத் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது, டால்மியாபுரம் என்ற ஊரின் பெயரை கல்லக்குடி என மாற்றக் கோரி போராட்டத்தில் குதித்தார், மு.கருணாநிதி.
அதன் ஒருபகுதியாக ரயில் மறியலில் ஈடுபட்டார். அதன் அடையாளமாகத்தான், கட்சி தொடர்பான கொள்கை விளக்கப் பாடலை பாடிய நாகூர் அனிபா, 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற வரிகளைப் பாடி, அப்பாடலுக்கு உயிர் கொடுத்தார். இந்த இளம் தலைமுறை அறியாத தகவல்கள் இவை.
அப்போது மறியல் போராட்டத்தில் கைதான கருணாநிதியை அரியலூர் சிறையில் அடைத்தனர். அந்தவகையில், திமுகவுக்கும் கல்லக்குடி பழங்காநத்தத்துக்கும் இடைவெளி இல்லாமல் ஓர் அரசியல் தொடர்பு இருந்து வருகிறது.
அதை மீண்டும் நினைவூட்டியுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு என 30 கோடியே 26 லட்சம் ரூபாயில் நிறைவு பெற்ற 51 திட்டப்பணிகளைச் அண்மையில் அவர் திறந்த வைத்தார். அப்போது, 'கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்' என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அரியலூர் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "அரியலூர் என்பது ஓர் அரிய மாவட்டம். இங்கேதான் கங்கையை வென்ற முதலாம் ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கினான்.
தனது ஆட்சிக்காலத்திலே தலைநகரைத் தஞ்சையிலிருந்து சோழபுரத்துக்கு இடம் மாற்றினான். தமிழ் காக்க, தமிழர் தம் நலம் காக்க டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்று பெயர் சூட்டுவதற்காகத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து கல்லக்குடிக் கொண்டானாக, தமிழ்க்குடி தொண்டனாக, கலைஞரைத் தலைவராக எழவைத்த மாவட்டம் இந்த அரியலூர்.
கலிங்கச் சிற்பங்கள், யானை சுதைச்சிற்பம், இரட்டைக் கோயில் சிற்பம் என்று எங்கு திரும்பினாலும் அரியலூரில் அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இது கனிமவளம் நிறைந்த மாவட்டம். சுண்ணாம்புக்கல், மணல் கற்கள் என்று இந்த மாவட்டம் கனிமம் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. இங்கே உள்ள ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் எண்ணெய், எரிவாயு வளங்கள் மிக்க நிலமாக விளங்குகிறது" என்று குறிப்பிட்டார்.
ஸ்டாலினின் பேச்சு வரலாற்றுப்பூர்வமான உண்மை. அரியலூருக்குத் தொன்மையான பழைய வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலம் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரிகம் ஆகும்.
சோழப்பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழனின் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரம். அந்த நகர அமைப்பு இன்று இல்லை. கட்டுமானங்கள் அனைத்தும் மண்ணில் புதைந்து போயின. அதனை அகழாய்வு செய்து கண்டுபிடிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
மனித இனம் தோன்றுவதற்கு முன் அரியலூர்
மனித இனம் தோன்றுவதற்கு முன், கடலுக்கடியில் அரியலூர் மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால், கடல் நீரானது கிழக்கு நோக்கி நகர்ந்ததாக அறியப்படுகிறது. அதன் விளைவாக ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகள் நிலங்களில் வெளிப்பட்டுள்ளன.
அரியலூர் தனி மாவட்டமான கதை
இவ்வளவு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட அரியலூரை, பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக 2007 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். அன்று முதல் அரியலூர் தனி அடையாளம் பெற்றது.
இப்பகுதிவாழ் மக்கள், 'ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்' என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதனை ஏற்று ஆடித் திருவாதிரை நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த மாவட்டத்தில் கனரக வாகனங்களின் புழக்கம் அதிகம். காரணம், இம்மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிகம் செயல்படுகின்றன. அதனால், சாலைகள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின்றன எனத் தொடர்ந்து மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், 'சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று அரியலூரில் நடைபெற்ற விழாவில் அறிவித்தார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்துக்காக 13 வருவாய் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிய உரிமையாளர்களிடம் வழங்கும் உத்தரவைப் பிறப்பித்தார். அதேவேகத்தில் நிலத்தை இழந்து வாடியவர்களுக்கு உறுதிமொழி ஆணையும் வழங்கினார்.
மேலும், நிலுவையிலுள்ள மேலுர் மற்றும் இலையூர் மேற்கு ஆகிய இரண்டு கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுதவிர, 'அரியலூர் மாவட்டப் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைவடிவப் பூங்கா அமைப்போம்' என்றார். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனுமதியையும் வழங்கினார். அடுத்ததாக, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக முதலமைச்சர் ஸ்டாலின் தரம் உயர்த்தினார்.
சீனாவுடன் சோழர்கள் கொண்டிருந்த வணிக உறவு
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் 2021 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மொத்தம் 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 17 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டன. இந்த ஆய்வில் மொத்தமாக 1003 தொல்பொருட்கள் கிடைத்தன.
மாளிகை மேட்டில் 2021 முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்பின் முதற்கட்ட ஆய்வு தொடங்கியது. அப்போது கூரை ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன வளையல்கள், செப்புக்காசுகள் உள்ளிட்டவை கிடைத்தன. சுமார் 5 அடி உயரத்தில், ஒரு மீட்டர் அகலம் உள்ள மிக பிரம்மாண்டமான அரண்மனைச் சுவர் ஒன்றும் அதன் வழியே செங்கற்களால் ஆன 5 அடி நீளம் கொண்ட நீர் வெளியேறும் வாய்க்காலும் கண்டறியப்பட்டது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக தொடங்கிய இரண்டாம்கட்ட ஆய்வில் மாளிகை மேட்டில் 25 செ.மீட்டர் உயரமும் 12 செ.மீட்டர் அகலமும் கொண்ட பழங்கால மண்பானை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. மேலும் செப்புக்காப்பு, தங்கக்காப்பு, வட்டச்சில்லுகள், சுடுமண் கெண்டி மூக்குகள், செலடன் மற்றும் போர்சலைன் எனப்படும் சீனப் பானை ஓடுகள் அதிகம் கண்டெடுக்கப்பட்டன.
'சோழகேரளன் திருமாளிகை’ எங்கே உள்ளது?
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இடைக்காலத்தின் தொடக்கத்தின் அடையாளமாக இவை கணக்கிடப்பட்டுள்ளன. இவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் சீனர்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் யானைத் தந்தத்தால் ஆன சிற்பம் ஒன்று உடைந்துபோன நிலையில் கண்டறியப்பட்டது. இது ராஜாவின் சிற்பமாக இருக்கலாம் என்றும் மிகச் சிறப்பு வாய்ந்த பொருள் என்றும் கணிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் தனது அரியலூர் பயணத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் 'சோழகேரளன் திருமாளிகை' என்ற பெயரில் அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அதையொட்டியே இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. அதனைக் கடந்த ஜனவரி மாதமே ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இத்தனை செழுமைமிக்க வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நாளைய வரலாற்றில் இந்த சின்னங்கள் தனித்து ஒளிவீசப்பட உள்ளன. அது வெறும் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள்.