கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா! நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு திருச்சி வந்த அவர், தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்திருந்தார். இதனையடுத்து இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.30 மணியளவில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மக்களை சந்தித்த மோடி, பின்னர் கோயிலுக்கு சென்றார். பெருவுடையார் கோயிலின் வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கோயிலுக்குள் இருக்கும் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கங்கையிலிருந்து தான் கொண்டு வந்த புனித நீரை அபிஷேகத்திற்கு வழங்கிய பிரதமர், சில நிமிடங்கள் தியானம் மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியையும் பார்வையிட்ட அவர், மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்.
ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் பங்கேற்பது பெருமைக்குரிய நிகழ்வு என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறியிருக்கின்றனர். இந்நிகழ்வை முடித்துக்கொண்டு, தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்கிறார்.












Click it and Unblock the Notifications