வயசு 103.. கொரோனாவுடன் போராடி 5 நாளில் குணமான சுதந்திரப் போராட்ட வீரர்!
103 வயதில் கொரோனாவை வென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பெங்களூருவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் துரைசாமி.
பெங்களூரு: கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் சுதந்திர போராட்ட வீரர் துரைசாமி 103 வயதில் கொரோனாவை வென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழன் உரைத்த பொன் மொழி. ஆனால் இன்றைய சூழலில் கொரோனா எனும் கொடிய நோயில் சிக்கி வதைப்பட்டு கொண்டிருக்கிறது மனித இனம். கண்ணுக்கு தெரியாத அந்த எதிரியை வீழ்த்த போர் வீரர்களை போல முன்கள பணியாளர்கள் பலர் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து வருகிறார்கள்.
மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்
இந்த போராட்டத்தில் எப்படியும் கொரோனாவை வென்றே ஆக வேண்டும் என மனித குலம் போராடி வருகிறது. இந்நிலையில், ஆங்கிலேயர்களையே விரட்டியத்த எனக்கு கொரோனா எல்லாம் துச்சம் என மார்த்தட்டி பறைகொட்டுகிறார் 103 வயது காந்தியவாதியும், சுதந்திர போராட்ட வீரருமான ஐயா துரைசாமி.
காந்தியவாதி
தியாகி ஹரோஹள்ளி சீனிவாசய்யா துரைசாமி பிறந்தது 1918ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி. அவரது இளமை பருவம் எல்லாம் இந்திய சுதந்திர போராட்டத்திலேயே கழிந்தது. மகாத்மா காந்தியின் மீது அவரது கொள்கைளின் மீது தீராப் பற்று கொண்டிருந்த துரைசாமி ஐயா, வெள்ளையனே வெளியேது இயக்கத்தில் கலந்துகொண்டவர்.
தொடர் போராட்டம்
அதற்காக கடந்த 1943ம் ஆண்டு அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டம் உச்சம் தொட்டிருந்த அந்த சமயத்தில் சுமார் 14ம் மாதங்கள் சிறையில் இருந்தார் துரைசாமி. 1944ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் காந்திய வழியில் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.
அறிவியல் பட்டதாரி
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் துரைசாமி ஐயாவின் போராட்டம் ஓயவில்லை. இந்திய திருநாட்டுடன் இணைய மறுத்த மைசூரு அரசருக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் துரைசாமி. அறிவியல் பட்டதாரியான துரைசாமி ஐயா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
கொரோனா பாதிப்பு
தனது வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக்கொண்ட துரைசாமி ஐயாவை எல்லோரையும் போல சீண்டி பார்த்தது கொரோனா. ஆனால் அவரிடம் கொரோனாவின் பாட்சா பழிக்கவில்லை. ஐந்து நாட்களிலேயே கொரோனாவை உடலில் இருந்து ஓட விரட்டிவிட்டார் இந்த 103 வயது போராளி.
சிகிச்சையில் நலம்
பெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை அருகில் இருந்து மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொண்டார் அந்த மருந்துவமனையின் இயக்குனரும், முன்னாள் இந்திய பிரதமர் தேவகௌடாவின் மருமகனுமான மருத்துவர் மஞ்சுநாத். சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார் துரைசாமி ஐயா.
தற்காப்பு
நல்ல பழக்க வழக்கம் இருந்தால் எப்பேர்பட்ட கொடிய கிருமியிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என உணர்த்தியிருக்கிறார் இந்த 103 வயது தாத்தா. அவரது வழியில் மக்களும் கொரோனாவை நம்பிக்கையுடன் விரட்டியடிப்போம்.