பெங்களூரில் துப்பாக்கியோடு புகுந்த கொள்ளையர்கள்.. நகைக்கடைக்காரர் செய்த சம்பவத்தால் தெறித்து ஓட்டம்
பெங்களூர்: பெங்களூரில் நேற்று முன் தினம் இரவு தங்க நகைக்கடையை அடைக்கும் போது முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் கடைக்குள் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் கடை ஊழியர்களை மிரட்டி 184 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வெறும் 15 நொடிகளில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் திருடன் திருடன் என கத்தி கூச்சலிட அருகில் இருந்த கடைகளில் இருந்தவர்கள் ஓடிவந்ததால் கொள்ளையர்களால் நீண்ட நேரம் நின்று கொள்ளையடிக்க முடியவில்லை. மாட்டிக்கொள்வோம் என பயந்து வந்தது போதும் என அங்கிருந்த மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மாஜோஹள்ளியில் கன்னையா லால் என்பவருக்கு சொந்தமாக தங்க நகைக் கடை உள்ளது. வழக்கம் போல் நேற்று முன் தினமும் அவர் தங்க நகைக்கடைக்கு வந்திருந்தார். எப்போதும் கடையை இரவு 9 மணியளவில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் இரவு 9 மணியளவில் கடையை அடைப்பதற்காக ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர் கன்னையா தயாராக இருந்தனர்.
அப்போது திடீரென முகமூடி அணிந்தபடி 3 பேர் மடமடவென மின்னல் வேகத்தில் கடைக்குள் புகுந்தனர். அவர்கள் கடை உரிமையாளர் கன்னையா மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை எடுத்து போடுங்கள்.. இல்லையெனில் சுட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். கையில் ஒரு சாக்குப்பையையும் கொள்ளையர்கள் வைத்து இருந்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் ஊழியர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
எனினும் முகமூடி கொள்ளையர்கள் கடைகளில் இருந்த நகைகளை சாக்குப்பையில் நகைகளை அள்ளிப்போட்டனர். இதற்கிடையே பயத்தில் கடை உரிமையாளர் கன்னையா, காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. திருடன்.. திருடன் என கத்தி கூச்சலிட்டார். இதனால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த கொள்ளையர்கள் இனி இங்கு நின்றால் மாட்டிக்கொள்வோம் என பயந்துபோய் கையில் மாட்டிய தங்க நகைகளோடு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அப்போது அருகில் உள்ள கடையில் இருந்து வந்த ஒருவர் அவர்களில் ஒருவரை பிடிக்க முயன்றார். எனினும் அவர்கள் கையில் சிக்காமல் வெளியே தயாராக நின்ற காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். பக்கத்து கடைகளில் இருந்தும், அந்த வழியாக சென்றவர்களும் உள்ளே வந்ததால் கையில் கிடைத்த நகைகளோடு, அடித்தோம் பிடித்தோம் என கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் வெறும் 16 நொடிகளில் நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்ட கன்னையா சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடைக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 184 கிராம் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications