மசூதி போல் தோற்றம்.. புல்டோசரால் இடிப்பதாக எச்சரித்த பாஜக..இரவோடு இரவாக மாறிப்போன பஸ் நிறுத்தம்
பெங்களூர்: மைசூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தின் மேல் 3 குவிமாடம் (டோம்) அமைக்கப்பட்ட நிலையில் அது மசூதி போல் இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது பஸ் நிறுத்தத்தின் டிசைன் இரவோடு இரவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சமீப காலமாக மதம்சார்ந்த பிரச்சனைகள் தலைத்தூக்கின. தற்போது இந்த பிரச்சனைகள் சற்று தணிந்துள்ளது. இது நல்ல விஷயமாக உள்ளது.
இருப்பினும் கூட கர்நாடகாவில் அவ்வப்போது மதம்சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பி பெரும் போராட்டங்கள் நடந்தது.
என்ன மசூதி மாதிரி இருக்கு.. மைசூர் பஸ் நிறுத்தத்தை இடித்து தள்ளுங்க..தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆர்டர்
ஹிஜாப் பிரச்சனை
இந்த ஹிஜாப் போராட்டம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் நீதிமன்றங்கள் வரை இந்த விவகாரம் சென்றது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்பிறகும் கூட சிலர் மதம்சார்ந்த பிரிவினையை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மைசூர் பஸ் நிறுத்த விவகாரம்
குறிப்பாக கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்காமல் இந்துக்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் சில இந்துத்துவா அமைப்பினர் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் தான் புதிதாக மைசூர் பஸ் நிறுத்த பிரச்சனை எழுந்தது.
மசூதி போல் என குற்றச்சாட்டு
அதாவது மைசூரில் இருந்து தமிழ்நாட்டின் ஊட்டி செல்லும் ரோட்டில் மைசூர் மாநகராட்சி மற்றும் கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு புதிதாக பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் மேல்புறம் 3 டோம்(குவிமாடம்) அமைக்கப்பட்டுள்ளது. இது மசூதியில் உள்ள டோம் போன்று இருப்பதாக பாஜக கூறியது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கூறினர்.
இடிப்பதாக பாஜக எம்பி எச்சரிக்கை
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு மைசூர் -குடகு நாடாளுமன்ற எம்பி பிரதாப் சிம்ஹா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இன்னும் சில நாட்களில் பஸ் நிறுத்தத்தின் டிசைன் மாற்றம் செய்யப்ட வேண்டும். இல்லாவிட்டால் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இதில் தலையிட்டது. இந்த ஆணையம் சார்பில் மைசூர் மாநகராட்சி மற்றும கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி டிசைனை மாற்றம் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மாவட்ட அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.
டிசைன் மாற்றம்
இந்நிலையில் தான் நேற்று இரவோடு இரவாக பஸ் நிறுத்ததின் மேல் அமைக்கப்பட்டு இருந்த 2 சிறிய டோம்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு டோம் மட்டுமே உள்ளது. அதாவது முதலில் பஸ் நிறுத்தத்தின் இருபகுதிகளில் 2 சிறிய டோம்களும், மத்தியில் பெரிய டோமும் இருந்தது. தற்போது 2 சிறிய டோம்கள் அகற்றப்பட்ட நிலையில் பெரிய டோம் மட்டுமே உள்ளது.
பாஜக எம்எல்ஏ விளக்கம்
இதுபற்றி பாஜக எம்எல்ஏ ராம்தாஸ் கூறுகையில், ‛‛பஸ் நிறுத்தத்தால் சர்ச்சை வருவதை விரும்பவில்லை. எனது தொகுதியில் மொத்தம் 12 பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது மைசூர் பேலஸ் டிசைனில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மதம் சார்ந்த சர்ச்சையை கிளப்பியது. இதனால் பஸ் நிறுத்தத்தின் மேல் உள்ள 2 சிறிய டோம்களை நீக்கி உள்ளோம்'' என்றார்.
பிரதாப் சிம்ஹா வரவேற்பு
இந்த நடவடிக்கையை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ நடுவில் பெரிய குவிமாடமும், அடுத்தடுத்து இரண்டு சிறிய குவிமாடங்களும் இருந்தால் அது மசூதிதான். கால அவகாசம் கேட்டு சொன்ன சொல்லை காப்பாற்றிய மாவட்ட ஆட்சியருக்கும், எதார்த்தத்தை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்த ராமதாசுக்கும் நன்றி'' என கூறியுள்ளார்.