அடேங்கப்பா.. ரூ.60 ஆயிரம் கோடியா? அதானியை அசால்டாக "டீல்" செய்த அசோக் கெலாட் -ராகுல் காந்தி புகழாரம்
பெங்களூரு: ராஜஸ்தானில் ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டத்தை தொழிலதிபர் அதானி கொண்டு வர முயன்றபோது அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் அசோக் கெலாட் எந்த சிறப்பு சலுகையும் காட்டவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.
ஏன் இப்படி பாரபட்சமாக செயல்படுறீங்க.. ஊடகங்கள் மீது அசோக் கெலாட் பாய்ச்சல்.. ஏன் தெரியுமா?
கர்நாடகாவில் யாத்திரை
கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கவனம் ஈர்க்கும் ராகுல்
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்தும் கூட்டங்களில் பேசியும் வருகிறார். சில நாட்களுக்கு முன் கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேசிய படங்களும், பாத யாத்திரையில் பங்கேற்ற சோனியா காந்திக்கு ராகுல் காந்தி காலணி மாட்டிவிடும் காட்சியும் அதிகளவில் பகிரப்பட்டது.
அதானி திட்டம்
இந்த நிலையில் இன்று தும்கூரில் நடைபயணத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராஜஸ்தானில் அதானி நிறுவனம் நேற்று ரூ.60,000 கோடி முதலீடு செய்துள்ளது குறித்து பேசினார். "ராஜஸ்தானில் ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த தொழிலதிபர் அதானி முன்வந்தார். எந்த முதலமைச்சரும் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதியளிக்கவோ, அல்லது தன்னுடைய அரசியல் செல்வாக்கின் மூலம் அதானிக்கு உதவி செய்யவோ இல்லை.
தனிநபர் ஆதிக்கம்
பாஜக அரசாங்கம் இந்தியாவில் 2 முதல் 3 பேரை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு தொழிலிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதைதான் நான் எதிர்க்கிறேன். நான் இந்த முதலாளித்துவத்தைதான் எதிர்க்கிறேன். எந்த தொழிலுக்கோ அல்லது தொழில் ஒத்துழைப்புக்கோ எதிரானவன் அல்ல." என்றார்.
அசோக் கெலாட்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை தலைவராக்க காந்தி குடும்பம் முடிவு செய்தது. ஆனால், அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சச்சின் பைலட் முதலமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட் மீது அதிருப்தியடைந்த நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே ராகுல் காந்தி அவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..