சாலையில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடி.. பார்த்ததும் கர்நாடக பெண்கள் செய்த செயல்.. பஜ்ரங்தள் கடுப்பு
பெங்களூர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்தவர்கள் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் சாலையின் நடுவே பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஒட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தான் சாலையில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் தேசியக்கொடியை இஸ்லாமிய பெண்கள் 2 பேர் அகற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும்.

இந்த தாக்குதலால் தற்போது இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. எல்லையில் இருநாட்டு வீரர்களும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதல் போராக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளது.
இதற்கிடையே தான் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் கலபுரகியில் நேற்று நடுரோட்டில் பாகிஸ்தான் கொடிகள் ஒட்டப்பட்டன. பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கலபுரகியில் உள்ள ஜகத் சர்க்கிள், ஆலந்த் நாகா, மார்க்கெட் சவுக், சாத் கும்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் பாகிஸ்தான் கொடியை ஒட்டினர். அதில் மக்கள் மிதித்து செல்வதன் மூலமாகவும், வாகனங்கள் ஏறி செல்வதன் மூலமாகவும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா கூறுகையில், ‛‛காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் கொடியை சாலையில் ஒட்டி போராட்டம் நடத்தினர். இதற்கு அனுமதி வாங்கவில்லை. இந்த சம்பவம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளோம்'' என்றார். மேலும் பதற்றம் ஏற்பட்டு இருதரப்பு மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் சாலையில் ஒட்டப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடிகளை அகற்றினர்.
முன்னதாக சாலைகளில் ஒட்டப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடிகளை 2 பெண்கள் தாமாக முன்வந்து அகற்றினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் பலரும் அந்த பெண்களை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தியாவிற்கும் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இந்த பெண்கள் பாகிஸ்தான் கொடியை அகற்றுகின்றனர் என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்போ, இஸ்லாமிய பெண்கள் பதற்றத்தை குறைக்க தான் பாகிஸ்தான் கொடியை அகற்றினர். இதனால் ஏதாவது பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அகற்றினர் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications