நீளும் “லிஸ்ட்”.. பாபர், ஞானவாபிக்கு பின் மைசூர் திப்பு சுல்தான் மசூதி - பஜ்ரங்தள் “டார்கெட்”
பெங்களூரு: கர்நாடகாவில் புகழ்பெற்ற திப்பு சுல்தான் மசூதி என்று அழைக்கப்படும் மைசூரு ஈத்கா மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வழக்கு தொடர பஜ்ரங்தள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
அயோதியில் முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதியை ராம ஜென்ம பூமி அரக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்த இலக்கு என சில மசூதிகளை பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் சுட்டிக்காட்டினர்.
அதில் முக்கியமாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஞான்வாபி மசூதியையும், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் அவர்கள் கோடிட்டு காட்டினார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

ஞானவாபி மசூதி
இதனருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் அவர்கள் கட்டிய ஞானவாபி மசூதி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதி கடந்த சில மாதங்களுக்கு சர்ச்சைக்கு உள்ளானது. ஞானவாபி மசூதி இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வாரணாசி நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் இருந்ததாக கூறி அதற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈத்கா மசூதி
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பழமையான ஈத்கா மசூதி இருக்கும் இடம் கிருஷ்ணர் பிறந்தது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. அண்மையில் காசிக்கு சென்ற பாஜக ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத், "அயோத்தியில் ராமர் எங்கும், எதிலும் நிறைந்து இருப்பதை போன்றே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்து உள்ளனர். ஹரஹர மஹாதேவ்." என்றார்.

திப்பு சுல்தான்
இந்த நிலையில்தான் கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள புகழ்பெற்ற திப்பு சுல்தான் மசூதி என்று அழைக்கப்படும் ஈத்கா மசூதியை குறிவைத்து இருக்கிறார்கள் சங்பரிவார அமைப்பினர். இந்த மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 108 மனுக்களை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

தொடரும் மத பதற்றம்
முன்னதாக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடையில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சனை, அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஹலால் சர்ச்சையால் அம்மாநிலத்தில் மத பதற்றம் ஏற்பட்ட நிலையில் திப்பு சுல்தான் மசூதிக்கு பஜ்ரங்தள் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications