‛மசால் தோசை மசால் தோசை தான்யா’..வெள்ளத்துக்கு நடுவே பெங்களூர் பாஜக எம்பி வீடியோ! மக்கள் கொதிப்பு
பெங்களூர்: பெங்களூரில் மழை வெள்ளம் பாதித்த நிலையில் சில இடங்களில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் மசால் தோசை சாப்பிட்டபடி அனைவரும் வாங்க என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, அழைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்து வருகிறது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது பெங்களூர் வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை
ஆகஸ்ட் 30ம் இரவில் பெங்களூரில் கனமழை பெய்தபோது ஓஆர்ஆர் எனும் பெங்களூர் புறநகர் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் விடியவிடிய நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. சர்ஜாபுரா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, பெல்லந்தூர் உள்பட நகரின் முக்கிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அன்று மட்டும் 130 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
இதனால் பெல்லந்தூர் ஏரியில் இருந்து வெளியேறிய நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. சர்ஜாபுரா, பெல்லந்தூர் உள்பட பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களை மழை நீர் சூழ்ந்தது. கார்கள், மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். ஏராளமான ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்லமுடியவில்லை. இதனால் தற்போது பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. மொத்தம் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், மழை நீர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் ஐடி நிறுவனங்கள் கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளன. தற்போது வரை பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை.

மழை வெள்ளத்தில் அரசியல்
இதற்கு மத்தியில் தான் பெங்களூரில் மழை நீர் தேங்கி நிற்கும் விஷயத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் செய்ய துவங்கி உள்ளனர். அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டசபை தொகுதிகள் நடைபெற உள்ளதால் இந்த விவகாரம் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. அதன்படி தற்பாது கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே வெள்ளத்துக்கான காரணம் என குற்றம்சாட்டுகின்றன. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மழை வெள்ளத்தை தடுக்க பாஜக அரசு முன்கூட்டி நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். தங்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டுகிறது என விமர்சனம் செய்து வருகின்றன.

குடிநீர் வினியோகம் பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க பெங்களூர் நகரில் சில இடங்களில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர் மழை வெள்ள பாதிப்பு, குடிநீர் வினியோகம் பாதிப்பு உள்ளிட்டவற்றால் பெங்களூரில் வசித்து வரும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். வரிகள் கட்டினாலும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றன.

தோசை சாப்பிட்ட பாஜக எம்பி
இந்நிலையில் தான் பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவரும், பெங்களூர் தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா மீது மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது மழை வெள்ளத்தில் குடிநீர் இன்றி சில இடங்களில் மக்கள் உள்ள நிலையில் தான் தேஜஸ்வி சூர்யா, ஓட்டல் ஒன்றில் தோசை சாப்பிடும் வீடியோவை பதிவிட்டு அனைவரும் சாப்பிட வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

வீடியோவில் கூறியது என்ன ?
இந்த வீடியோவில் தேஜஸ்வி யாதவ், பத்மநாபபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலின் பெயரை கூறி ‛‛இன்ஸ்டாவில் Penne மசால் தோசை தொடர்பான படங்களை பார்த்தேன். சாப்பிடும் ஆசை வந்ததால் ஓட்டலுக்கு வந்து சாப்பிடுகிறேன். நீங்களும் வாங்க. நிச்சயமாக ஒருமுறை வந்து ருசித்து பாருங்க. உப்பிட்டு கூட மிகவும் சுவையாக உள்ளது'' எனக்கூறி ஓட்டலுக்கு ப்ரோமோசன் செய்கிறார். இந்த சம்பவம் நேற்று நடந்ததாக கூறப்படும் நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விமர்சனம்
இதனை பார்த்த நெட்டிசன்கள் பாஜகவின் எம்பியான தேஜஸ்வி சூர்யாவை விமர்சனம் செய்து வருகின்றனர். சேத்தன் கிருஷ்ணா என்பவர், ‛‛உணர்ச்சியற்ற நயவஞ்சகர்'' என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "நாம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெங்களூர் பாதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் போது இவர் தோசை சாப்பிடுகிறார். உணர்ச்சியற்ற நயவஞ்சகர்'' என கூறியுள்ளார். இதேபோல் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளையில் எம்பிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல்லவி என்பவர், "வெள்ளம் பெங்களூரின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாதித்துள்ளது. முழு நகரத்தையும் அல்ல. சாப்பிடும்போது ஒருவர் கூறியதால் வீடியோ எடுத்துள்ளனர். ஏன் அவரை குறிவைக்கிறீர்கள். அவர் ஒன்றும் முதல்வர் அல்ல'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications