பெங்களூரில் களைகட்டிய தமிழ் புத்தக திருவிழா.. இன்றைய சிறப்பு நிகழ்ச்சி இதுதான்! குவியும் அறிஞர்கள்
பெங்களூர்: கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் இரண்டாம் தமிழ் புத்தக திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இன்றைய தினம் இலக்கிய மாலை என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூர் அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில் 2வது தமிழ் புத்தக திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

வரும் 10ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது. நாள்தோறும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2வது தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தமிழ் மொழி குறித்த கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
இந்நிலையில் தான் விழாவின் 8 வது நாளான இன்று இலக்கிய மாலை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று காலை 5 மணிக்கு அறிஞர் குணா எழுதிய ‛தமிழரின் தொன்மை' நூல் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதற்கு சென்னை குணாவின் அறக்கட்டளை செயலாளர் சாம்சன் தலைமை வகிக்க ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் முதுமுனைவர் க.விஜயகாந்த் நூல் திறனாய்வுரை ஆற்றுகிறார். ஆய்வறிஞர் குணா ஏற்புரை வழங்குகிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு இரா.வினோத் வரவேற்புரை ஆற்றிய நிலையில் க.தினகரவேலு நன்றியுரை வழங்க உள்ளார்.
அதன்பிறகு விஞ்ஞானியுடன் நேருக்கு நேர் எனும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு பெங்களூர் சுங்கத்துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் நாயகம் கோ மணிவாசகம் தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்கிறார். நெகியாள்கையை அருள்கோவன் நிகழ்த்த அ.செந்தில்நாதன் வரவேற்புரையும், மதியழகன் நன்றியுரையும் வழங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications