சடலத்தை கொண்டுவர தேவைப்படும் இடத்தில்.. பல மாணவர்களை அழைத்து வரலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
பெங்களூர்: உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனின் உடலைக் கொண்டுவந்தால், விமானத்தில் அதிக இடம் பிடிக்கும், அதற்குபதில் அங்கு 10 மாணவர்கள் உட்காரலாம் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து பல இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இந்திய மாணவர்கள் உக்ரைனைவிட்டு வெளியே வரமுடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.
அடையாளம் காணப்பட்டது மாணவர் நவீன் உடல்.. கர்நாடக முதல்வர் தகவல்.. இந்தியா கொண்டுவர ஏற்பாடு
நவீன்
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர் நவீன் சேகரப்பா. இவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்தவர். 20 வயதான நவீன் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் 4 ஆவது ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருக்கும் பதுங்கு குழியில் தங்கி வந்தார் நவீன். இந்நிலையில் நேற்று ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொலை
இதுகுறித்து நவீனுடன் ஹாஸ்டலில் தங்கியிருந்த ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நவீன் நேற்று காலை உக்ரைன் நேரப்படி 10.30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகைக் கடை முன்பு வரிசையில் காத்திருந்த போது அங்கிருந்த மக்கள் மீது ரஷ்யா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் எங்கிருக்கிறது என தெரியவில்லை. எங்களால் மருத்துவமனைக்கும் சென்று பார்க்க முடியவில்லை என்றார். இதையடுத்து நவீன் தந்தை சேகரப்பா ஞானேந்திராவை பிரதமர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். உடலைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்.
பாஜக எம்.எல்.ஏ
கர்நாடக மாநிலம் ஹுப்லி தர்வாத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட். உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீன் உடல் கொண்டுவரப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் அரவிந்த் பெல்லாட். அப்போது, ''பிரதமர் மோடி மாணவர் உடலைக் கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வருகிறது. அங்குள்ள நிலைமை எப்படி இருக்கிறது என எல்லாருக்கும் தெரியும்.
விமானத்தில் இடம்
விமானம் மூலம் மாணவர்களை அரசு மீட்டு அழைத்து வருகிறது. இந்நிலையில், மாணவரின் உடலை சுமந்து வரும் சவப்பெட்டி வைக்கும் இடத்தில் கிட்டத்தட்ட பத்து மாணவர்கள் அமரலாம். சவப்பெட்டிக்கு அதிக இடம் தேவைப்படும்'' என்று பேசியுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மாணவர் உடல் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்தது. ஆனாலும் மாணவர் உடல் இந்தியா கொண்டுவரப்படாததால் கர்நாடக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில்தான், சடலத்தை கொண்டுவருவதை விட உயிரோடு மாணவர்களை அழைத்துவருவது முக்கியம் என்று கூறியுள்ளார் இந்த பாஜக எம்எல்ஏ. இதனால் நவீன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.