அடடே.. வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.. பெங்களூர் தெற்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காத பாஜக
பெங்களூர்: நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்யும், காலக்கெடு முடிவடைந்த நிலையிலும் பெங்களூர் லோக்சபா தொகுதிக்கு, இன்னமும் பாஜக தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா மற்றும் அந்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் நடுவே நிலவும் பனிப் போர் காரணமாகத்தான் இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் இழுபறி நீடித்து வருகிறது.
பெங்களூர் தெற்கு தொகுதியில் எம்பியாகவும், மோடி அரசில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமாக இருந்தவர், ஆனந்தகுமார். ஆனால், கேன்சர் காரணமாக கடந்த வருடம், நவம்பரில் அனந்தகுமார் மரணமடைந்தார். இந்த நிலையில் அவரது மனைவி தேஜஸ்வினி ஆனந்தகுமாரை பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்பது எடியூரப்பாவின் விருப்பமாக இருந்து வருகிறது.
1952 முதல் இதுவரை.. லோக்சபா தேர்தல் தகவல் அனைத்தும் இங்கே
எடியூரப்பா விருப்பம்
தேஜஸ்வினியும் இதற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். ஆனால் சந்தோஷ், தேஜஸ்வி சூர்யா என்ற வேட்பாளர் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் யாருக்கு போட்டியிட டிக்கெட் கொடுப்பது என்று பாஜக மேலிடம் நீண்ட யோசனையில் இருப்பதால் இன்னமும் முடிவுக்கு வர முடியாமல் தவித்து வருகிறது.
அனந்தகுமாரின் தொடர் வெற்றிகள்
1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தகுமார், அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்தார். பாஜக கட்சியின் செல்வாக்கைவிடவும், அதிகமாக அனந்தகுமார், தொகுதி மக்களிடையே பேணிய, தனிப்பட்ட முறையிலான, நல்ல உறவும் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணம். எனவே, ஆனந்தகுமார் மனைவி அந்த தொகுதியில் போட்டியிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும் என்று எடியூரப்பா, கருதுகிறார்.
டீ சர்ட் வாங்கலையோ டீ சர்ட்.. உடனே ஆர்டர் பண்ணுங்க மக்களே.. சவுக்கிதார் டீ சர்ட் விற்கும் மோடி!
கடும் போட்டி
அதேநேரம் 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அனந்தகுமாரிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெங்களூர் தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். போட்டி கடுமையாக இருக்கும் என்று முடிவாகிவிட்ட சூழ்நிலையிலும், பாஜக இன்னமும் தனது வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருவது, கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சந்தோஷ் உட்பட சில, பாஜக தலைவர்கள், பெங்களூர் நகரின், பசவனகுடி சட்டசபை தொகுதி எம்எல்ஏ ரவி சுப்பிரமணியா உறவுக்காரரான, தேஜஸ்வி சூர்யாவை களமிறங்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
இழுபறி நீடிப்பு
வழக்கறிஞர் தொழில் செய்துவரும் தேஜஸ்வி சூர்யா, நீண்டகாலமாக பாஜக உறுப்பினராகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். தேஜஸ்வினி அனந்தகுமார் போலவே தேஜஸ்வி சூர்யாவும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். தேஜஸ்வினியை ஒப்பிட்டால் தேஜஸ்வி சூர்யாவுக்கு அரசியல் அனுபவம் அதிகம். அனந்தகுமார் இருக்கும் வரை தேஜஸ்வினி வெளிப்படையாக எந்த அரசியலும் ஈடுபடவில்லை என்பது அவருக்கு சீட்டு கொடுப்பதில் பாஜக மேலிடம் யோசிப்பதற்கான ஒரு காரணமாக கூறப்படுகிறது. முன்னதாக, பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று ஒரு வதந்தி பரவியது. அதை பாஜக தலைவர்கள் தற்போது மறுத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.