காபி டே கணக்கிலிருந்து மாயமான ரூ.2000 கோடி.. சித்தார்த்தா தற்கொலைக்கு பின்பும் மர்மம்.. பகீர்!
காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலைக்கு பின் அந்த நிறுவனத்தின் கணக்கில் இருந்து 2000 கோடி ரூபாய் காணாமல் போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது .
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலைக்கு பின் அந்த நிறுவனத்தின் கணக்கில் இருந்து 2000 கோடி ரூபாய் காணாமல் போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது .
Recommended Video
காபி டே நிறுவனர் சித்தார்த்தா கடந்த வருடம் ஜூலை இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இந்தியா முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென்று காணாமல் போன அவர், மங்களூர் அருகே நேத்ராவாதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
காரில் மீட்டிங்கிற்கு சென்று திரும்பியவர், பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை ஒருநாள் முழுக்க தேடி பின் மறுநாள்தான் அவரது உடலை கண்டுபிடித்தனர். நேத்ராவதி ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மூலம் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
என்ன காரணம்
சித்தார்த்தா மரணத்திற்கு பொருளாதார பிரச்சனையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் காரணமாக இவர் கஷ்டப்பட்டு வந்தார். இந்த தொடர் நிதி பிரச்சனை அவரை மொத்தமாக முடக்கி போட்டது. இதுதான் இவரை தற்கொலைக்கு தூண்டியது. பலரிடம் இவர் கடன் வாங்கி அதை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவரின் தற்கொலைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன விசாரணை
இந்த நிலையில் சிசிடி நிறுவனத்தின் மொத்த வங்கி கணக்கில் இருந்து 2000 கோடி ரூபாய் காணாமல் போய் இருக்கிறது. சிசிடி நிறுவனத்தில் வங்கி கணக்கில் காணப்பட்ட முறையற்ற தன்மை கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிற்கு தெரிய வந்தது. இதனால் இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஒரு மாதமாக வங்கி கணக்கில் ஏற்பட்ட முறைகேடு குறித்து விசாரணை செய்தது.
என்ன முடிவு
இந்த விசாரணை தற்போது முடிந்துள்ளது. அதில், இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் மொத்தம் 2000 கோடி ரூபாய் மாயமாக மறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி எங்கே போனது என்றே தெரியவில்லை என்று இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு மாத விசாரணையின் முடிவில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு நிறுவனங்களுக்கு நபர்களுக்கு இந்த பணம் கை மாறி இருக்கலாம் என்கிறார்கள்.
அதிகம் ஆக வாய்ப்பு
இந்த ரிப்போர்ட் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இந்த ரிப்போர்ட் வெளியாகும் போது இன்னும் பல உண்மைகள் வெளியாகும் என்கிறார்கள். சித்தார்த்தா தற்கொலைக்கு பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரிய வரும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல் இந்த காணாமல் போன பணம் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
பெரிய ரிப்போர்ட்
இப்போது வரை உருவாக்கப்பட்ட ரிப்போர்ட்டே 100 பக்கங்களை தாண்டி உள்ளது என்கிறார்கள். சித்தார்த்தா பல்வேறு நபர்களுக்கு தன்னுடைய கணக்கில் இருந்தே இப்படி பணம் அனுப்பி இருக்கிறார். இவர்களின் விவரங்களை எல்லாம் இந்த ரிப்போர்ட் வெளியான பின் மொத்தமாக வெளியிட இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளது என்கிறார்கள்.
சிக்கல்
2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட பின் இவருடைய பிஸ்னஸ் மொத்தமாக படுத்து இருக்கிறது. அந்த கால கட்டத்தில்தான் இவர் தன்னுடைய சொத்துக்களை அதிகம் விற்றார். கடன் வாங்கினார். அப்போதுதான் பங்குகளில் இவருக்கு நிறைய பிரச்சனை வந்துள்ளது. 2016 நவம்பரில் நன்றாக வருமானம் ஈட்டிய காபி டே நிறுவனம் போக போக இழப்பை சந்தித்தது. அதன்பின்தான் இவர் பெரிய இழப்பை சந்தித்து கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.