பெங்களூரில் தனியாக காரில் போனால் வரி.. விரைவில் மிகப்பெரிய திட்டம் வரப்போகிறது
பெங்களூர்: பெங்களூர் மாநகரை பொறுத்தவரை மிகவும் கடுமையான நெரிசல் உள்ள நகரம், குண்டும் குழியுமான சாலைகள் உள்ள நகரம் என்கிற அதிருப்தி ஐடி பணியாளர்களுக்கு அதிகமாக இருக்கிறது. கடுமையான நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கர்நாடகா மாநில அரசு ஒரு துணிச்சலான யோசனையைக் பரிசீலித்து வருகிறது. அந்த முடிவு ஐடி ஊழியர்களுக்கு நிச்சயம் ஷாக் தரும்.. அது என்னவென்றால், அதிக நெரிசல் மிகுந்த சாலைகளில் தனி ஆளாகச் செல்லும் கார்களுக்கு நெரிசல் வரி விதிப்பது தான்.
என்னங்க சொல்றீங்க.. காரில் தனியாக செல்வோருக்கு பெங்களூரில் அபராதமா என்றால்... ஆம்.. அப்படியான அபராதம் விதிப்பதற்கு கர்நாடகா அரசு தயாராகி வருகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. சென்னையை வைத்தே இதற்கான காரணத்தை கூறலாம்.. சென்னையில் நீங்கள் அண்ணா சாலையிலோ, ஜிஎஸ்டி ரோட்டிலோ அல்லது ஓஎம்ஆர் சாலையிலோ அல்லது ஆவடியில் இருந்து கோயம்பேட்டிற்கு செல்லும் சாலையிலோ அல்லது பல்வேறு சென்னையின் சாலைகளில் சென்றால் கார்களை அதிகமாக பார்க்க முடியும்.

கடுமையான நெரிசல்
மிக கடுமையான நெரிசல் மிகுந்த காலை வேளையில் காரில் ஒருவரே பயணிப்பார்.. அப்படிப்பட்ட கார்கள் மிகமிக அதிகஅளவில் செல்லும்.இது தற்போதைய சென்னை நிலவரம்.. இத்தனைக்கும் சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பல மாற்று சாலைகள், பொதுப்போக்குவரத்து என அதிக அளவில் உள்ளது. அதேபோல் எல்லாமே சென்னையில் ஒரே இடத்தில் குவிக்கப்படவில்லை.. பரவலாகவே ஐடி நிறுவனம் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் பிரிந்து பிரிந்தே உள்ளன. இருந்தாலும் நெரிசல் குறையவே இல்லை..
பெங்களூர் நகரில் மின்சார ரயில்கள் இல்லை
ஆனால் பெங்களூர் நகரம் அப்படி இல்லை.. சென்னையில் உள்ளது போல் புறநகர் ரயில்கள் இல்லை.. மெட்ரோ ரயில்கள் மட்டுமே உள்ளது. அங்கு ஐடி துறை மொத்தமாக எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் தான் அதிகமாக உள்ளது. நம் சென்னையில் 30 கிமீ அந்த பக்கம் உள்ள செங்கல்பட்டின் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் இருப்பது போல், பெங்களூர் பேருந்து நிலையம் மாற்றியமைக்கப்படவில்லை.. எல்லாமே குறுகிய தூரங்களிலேயே இருக்கிறது.
சென்னை போல் பெங்களூரில் தப்பிக்க வழிகள் இல்லை
பெங்களூர் நகரம் மிக மிக அடர்த்தியான நகரமாக இருக்கிறது. இதனால் நெரிசல் மிக மிக அதிகமாக இருக்கிறது.சென்னையில் உள்ளவர்கள் ஓஎம்ஆர் தொடங்கி சென்னையின் எங்கெல்லாம் நெரிசல் ஏற்படுமோ அங்கெல்லாம் சந்து பொந்துக்கள் பக்கத்திலேயே இருக்கும்.. தப்பித்து போய்விட முடியும். ஆனால் ஓஆர்ஆர் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மக்கள் தப்பிக்க மாற்றுவழிகள் கூட இல்லை.. கடும் நெரிசல் அவதிப்பட்டு வருகிறார்கள். பெங்களூரில் பீக் அவர்ஸில் மழையெல்லாம் வந்து, ஏதாவது பேருந்து மெயின் ரோட்டில் பழுதானால் நிலைமை அவ்வளவுதான்.ஏனெனில் பெங்களூர் மாநகரம் போக்குவரத்து நெரிசலுக்கு உலக அளவில் பிரபலமாகி இருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்..
தனி காரில் செல்வார்கள்
இவ்வளவு நெரிசல் மிகுந்த சாலையாக பெங்களூர் மாநகரம் மாறுவதற்கு பலரும் கார்களில் செல்வது தான். தனி ஒருவருக்கு ஒரு கார் என்று பல ஆயிரம் பேர் காரில் செல்வார்கள். அவர்கள் தனிகாரில் செல்லாமல் பொதுபோக்குவரத்தை நாடினால் அல்லது அலுவலக வாகனங்களில் சென்றால் நெரிசல் பெருமளவு குறையும்.. ஆனால் அதற்கு பலரும் தயாராக இல்லை.. இதனால் நெரிசலை எப்படி குறைக்கலாம் என்று யோசித்த அரசு, தனியாக காரில் செல்பவர்களுக்கு வரிபோடலாம் என்று யோசித்து வருகிறது.
நெரிசல் வரி விதிக்க அரசு ஆலோசனை
பெங்களூர் மாநகரின் நீண்டகால உள்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தணிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, கர்நாடகா மாநில அரசு,கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள் மற்றும் நகர பிளானிங் அதிகாரிகளை அழைத்து விவாதித்தது. இந்தக் கூட்டத்திற்கு கர்நாடக தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமை தாங்கினார். பயோகான் (Biocon) தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, பெங்களூர் நகர திட்டமிடுபவரும், யூலு (Yulu) நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஆர்.கே. மிஸ்ரா, மற்றும் நகர வடிவமைப்பாளரும், கட்டிடக் கலைஞருமான நரேஷ் நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல யோசனைகளில் ஒன்று தான் தனியாக கார்களில் செல்வர்களுக்கு நெரிசல் வரி விதிப்பது.
நெரிசல் வரி யாருக்கு
90 நாட்கள் பெங்களூர் நகரின் சாலைகள் அமைக்கும் பணியின் தரத்தை கடுமையாகச் சோதிப்பது மற்றும் நகரில் நடந்து வரும் அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களையும் நெருக்கமாகக் கண்காணிப்பது போன்ற விஷயமும் யோசனையாக தெரிவிக்கப்பட்டது. யூலு நிறுவனத்தின் இணை நிறுவனர் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் பெங்களூர் நகரில் நெரிசல் கட்டணம் விதிப்பது குறித்து விவாதித்தோம். வெளி வட்டச் சாலைக்குள் (ORR) நுழைந்து, காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தால், நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த வரி தனி ஆளாகப் பயணிக்கும் கார்களுக்கு மட்டுமே பொருந்தும். இது கார்களின் எண்ணிக்கையை குறைத்து, நகரத்தின் நெரிசலைக் குறைக்க உதவும். கார்களின் பயன்பாட்டைத் தடுக்க, இந்த வரியை ORR மற்றும் பிற அதிக நெரிசல் மிகுந்த முக்கியச் சாலைகளில் பயன்படுத்தலாம் என்றார்,
ஓஆர்ஆர் சாலை
பெங்களூருவின் ஓஆஆர் பகுதி உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களையும் கொண்ட நகரின் மிகப்பெரிய தொழில்நுட்ப பகுதியாகும். இந்தச் சாலை வடக்கில் ஹெப்பாலில் தொடங்கி தெற்கே சில்க் போர்டு வரை இருக்கிறது. இதுதான் பெங்களூரின் மோசமான நெரிசல் உள்ள சாலையாகும். அந்த சாலையில் தான் நெரிசல் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி போல் கிடையாது
டெல்லியை பொறுததவரை 'ஒற்றைப்படை-இரட்டைப்படை' (odd-even) திட்டம் மற்றும் மின்சார ரயில்,மெட்ரோ ரயில்கள் போன்றைவ ஓரளவு தீர்வை தருகின்றன ஆனால், பெங்களூருவில் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்கள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை.. பேருந்துப் போக்குவரத்து மட்டுமே பெரும்பாலும் வழியாக உள்ளது. ஆனால் நெரிசல் மிகுந்த சாலையில் வேகமாக போக முடியவில்லை.. இதனால பெங்களுர் மக்கள் தனிப்பட்ட வாகனங்களை அதிகம் நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில் பெங்களூரில் தனிநபர்கள் செல்லும் காருக்கு வரி விதிக்கும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, ஆரிங் கேபிடல் நிறுவனத்தின் நிறுவனர் டி. மோகன்தாஸ் பை, போதுமான பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், நெரிசல் கட்டணத்தை மக்கள் மீது சுமத்துவது என்பது மிகவும் கொடூரமான சுமை. பெங்களூருவில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications