முதலில் வெற்றி.. நள்ளிரவில் இடியாக இறங்கிய தோல்வி செய்தி.. கதறி அழுத காங்கிரஸ் பெண் வேட்பாளர்!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் முதலில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3 முறை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டதும், கதறி அழுதபடியே, வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார் சௌமியா ரெட்டி.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.கே ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக கலிகவுடா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட 177 தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வந்து நிலைமையை ஆராய்ந்தனர்.
பின்னர், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. 3 முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. மின்னணு வாக்கு எண்ணிக்கையும் மீண்டும் நடைபெற்றதால் வாக்கு எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதில், பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 1 ஆயிரத்து 226 வாக்குகள் பெற்றார்.

மறு வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தியவர்களில் சவுமியா ரெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்நாடகா மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளராக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications