ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. மறுபக்கம் யாத்திரை! ராகுல் காந்தி வாக்கு எங்கு யாருக்கு?
பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில், கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இதில் வாக்களிப்பாரா? அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
சசி தரூர் vs மல்லிகார்ஜுனா கார்கே.. புதிய காங்கிரஸ் தலைவர் யார்? 65 இடங்களில் இன்று வாக்குப்பதிவு!
தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது.
வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
ஒற்றுமை யாத்திரை
இதற்கிடையே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கர்நாடகாவில் முதல் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி பெல்லாரியில் தற்போது உள்ளார்.
வாக்களிப்பாரா?
இந்த நிலையில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி எங்கு வாக்களிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், "பெல்லாரி மாவட்டம் சங்கனகுல்லு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் முகாமில் ராகுல் காந்தி இந்த தேர்தலுக்கான வாக்கை செலுத்துகிறார்.
யாருக்கு ஆதரவு?
அவரோடு 40 காங்கிரஸ் நிர்வாகிகளும் வாக்களிக்க உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தலை பொறுத்தவரை காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையிலும் கலந்துகொண்டார். ஆனால், சசி தரூர் பங்கேற்கவில்லை. எனவே ராகுலின் ஆதரவும் கார்கேவுக்கே இருப்பதாக கூறப்படுகிறது.